Perambalur: Applications can be made to set up country poultry farms; Collector’s information!
பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகளுக்கு 50 % மானியத்துடன் நாட்டுக் கோழிப் பண்ணைகள் நிறுவும் திட்டம்” செயல்டுத்தப்பட உள்ளது. கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பதில் திறன்கொண்ட கிராமப்புற பயனாளியாக இருக்க வேண்டும். பயனாளிகள் கோழி கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும். இந்த பகுதி மனித குடியிருப்புகளில் இருந்து விலகி இருக்கவேண்டும். பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30% தாழ்த்தப்பட்ட / பழங்குடி இனத்தவரை சார்ந்தவராக இருக்க வேண்டும். 2022-2023, 2023-2024, 2024-2025 ஆம் ஆண்டு நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தின்கீழ் பயனாளிகள் பயனடைந்து இருக்கக் கூடாது. பயனாளிகள் 3 வருடங்களுக்கு குறையாமல் பண்ணையை பராமரிக்க உறுதியளிக்க வேண்டும். திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளி திரட்டவேண்டும். அதற்கான நிதி ஆதார ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்காணும் தகுதிகளை உடைய பயனாளிகள் அருகாமையிலுள்ள கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பத்தினை பெற்று உரிய விபரங்களுடன் பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் கிரேஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.