Perambalur: Applications can be submitted for the Tamil Nadu Green Champion Award; Collector informs!
தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் 03.09.2021 அன்று சட்டமன்றத்தில், 2021-2022 நிதியாண்டு முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்முயற்சியுடன் பங்கேற்று சிறந்த பங்களிப்பைச் செய்யும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ரூ.1.0 கோடி செலவில் “பசுமை சாம்பியன் விருது” வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதனடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் விருது பெறும் 100 தனிநபர்கள்/ நிறுவனங்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 2025 ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதுகளை, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன் மாதிரியான பங்களிப்பைச் செய்த அமைப்புகள்/ கல்வி நிறுவனங்கள்/ பள்ளிகள்/ கல்லூரிகள்/ குடியிருப்பு நலச் சங்கங்கள்/ தனிநபர்கள்/ உள்ளாட்சி அமைப்பு/ தொழில்துறைகள் போன்றவற்றை கௌரவிக்க முன்மொழிந்துள்ளது. பின்வரும் துறைகளில் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல்பாதுகாப்பு, புதுமையான பசுமை தயாரிப்புகள்/ பசுமை தொழில் நுட்பத்திற்கான ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ஆய்வுகள், நிலையான வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்ற தழுவல் மற்றும் தணிப்பு, உமிழ்வு குறைப்பு, பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல், சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள், கடலோரப் பகுதி பாதுகாப்பு போன்றவை, பிற சுற்றுச்சூழல் தொடர்பான திட்டங்கள், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி ஆகிய துறைகளிலிருந்து விண்ணப்பிக்கலாம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கத்துடன் தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது” வழங்கப்படும். இந்த விருதுப்பெற விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் 20.01.2026-க்குள், பெரம்பலூர் மாவட்ட அட்சியர் அலுவலக ‘அ’ பிரிவில் வழங்கிட வேண்டும். இது தொடர்பான தகவல்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய பெரம்பலூர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை 8056010150 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ந.மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.