பெரம்பலூர்: செல்போன் பேச்சுக்கு இடையூறு செய்த அரசு விடுதி மாணவிகளை கடித்த சமையலர்!

schedule
2025-03-31 | 19:19h
update
2025-04-01 | 04:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Cook bites government hostel students for interrupting cell phone conversation!

பெரம்பலூர் அருகே அரசு விடுதியில் செல்போன் பேச்சுக்கு இடையூறு செய்த மாணவிகள் இருவரை சமையலர் கடித்து குதறிய சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள வெண்பாவூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளில் 55 பேர் வடகரை கிராமத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதியில், தங்கி பள்ளிக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர்.

இன்று ரம்ஜான் பண்டிகையொட்டி விடுமுறை என்பதால், 25க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்களின் வீடுகளுக்கு சென்ற நிலையில் 30 மாணவிகள் விடுதியில் தங்கி இருந்ததாக தெரிகிறது. இன்று மாலை வழக்கம் போல் விடுதி வளாகத்தில் உள்ள மரத்தடியில் மாணவிகள் அனைவரும் விளையாடிக் கொண்டிருந்த போது, செல்போனில் பேசியபடி விடுதிக் கட்டிடத்தில் இருந்து வெளியே வந்த விடுதி சமையலரான நூத்தப்பூர் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி மனைவி செல்வி (40), விளையாடிக் கொண்டிருந்த மாணவிகள் அருகே சென்றுள்ளார்.

Advertisement

இந்நிலையில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களின் கூச்சல் சத்தமும் விளையாட்டும் செல்வியின் செல்போன் பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் ஆத்திரமடைந்து, கடும் கோபத்தோடு கற்களை தூக்கி மாணவிகள் மீது வீசியுள்ளார். இந்த திடீர் தாக்குதலில் பசும்பலூர் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி முதுகுத்தண்டுவடப் பகுதியில் அடிபட்டு அலறி துடித்துள்ளார். இதனால் அவருடன் விளையாடிக் கொண்டிருந்த சக மாணவிகள் அவரைப் பார்த்து ஏன் அக்கா இப்படி கற்களை கொண்டு எங்கள் மீது வீசி தாக்குதலில் ஈடுபடுகிறீர்கள்? என கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சமையலர் செல்வி ஓடிச் சென்று பெரிய வடகரை, காட்டுக்கொட்டகை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியையும், கற்களால் தாக்குதலுக்குள்ளான 14 வயது சிறுமியையும் கடித்துத் குதறி உள்ளார். கடும் கோபத்தோடு செல்வி கடித்து குதறியதில் மாணவிகள் இருவரும் அழுது துடி துடித்து கூச்சலிட்டுள்ளனர். கூச்சல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த விடுதிக் காப்பாளர் சங்கீதா மாணவிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார்.

மாணவிகளை கடித்துக் குதறிய விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என அறிந்த சமையலர் செல்வி, வேண்டும் என்றே மயக்கம் போட்டு விழுந்து, தன்னை மாணவிகள் சிலர் சேர்ந்து தாக்கி விட்டதாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். இது குறித்த தகவலின் பேரில், கை.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்தியதால், அரசு விடுதியில்மாணவிகள் இருவரை சமையலர் கடித்து குதறிய சம்பவம் விடுதி மாணவிகள் உள்ளிட்ட பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனிடையே விடுதியில் தங்கியுள்ள மாணவிகளின் குளியலறை புகைப்படங்களை அவரது நண்பருக்கு அனுப்பியதாகவும், மளிகை பொருட்களை கையாடல் செய்து வருவதாகவும் சமையலர் செல்வி மீது குற்றச்சாட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.06.2026 - 04:41:56
Privacy-Data & cookie usage: