Perambalur: Deworming tablet distribution drive for 217,994 people; Collector inaugurates the initiative.
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் இன்றும், 17.08.2026 அன்று விடுபட்ட குழந்தைகளுக்கும் நடைபெறுகிறது, இம்முகாமில் 1 முதல் 19 வயதிலான குழந்தைகள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கும் மற்றும் 20 முதல் 30 வயதிலான அனைத்து பெண்களுக்கும் ( கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து) குடற்புழு நீக்க மாத்திரை (அல்பென்டசோல்) வழங்கப்படுகிறது. 1 வயது முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களிலும், 6 வயது முதல் 19 வயது வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது.
பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியரும், அங்கன்வாடி பணியாளர்களும் வீடு வீடாக சென்று குடற்புழு மாத்திரைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகள் களையப்பட்டு குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் மாணவ மாணவிகளின் கல்வித்திறன் மேம்படும்.
அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் மூலமாக குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 1,72,960 குழந்தைகள் மற்றும் மாணவ மாணவிகள் மற்றும் 45034 பெண்கள் என 217994 பேர் பயனடைவார்கள். மேலும், பள்ளிகளிலும் அங்கன்வாடி மையங்களிலும் தன் சுத்தம் பற்றியும் திறந்தவெளியில் மலம் கழித்தல் தவிர்த்தல் பற்றியும் கை கழுவும் முறைகள் பற்றியும் நலக் கல்வி வழங்க அங்கன்வாடி மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மதியழகன், மாவட்ட சுகாதார அலுவலர் கீதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், நகர சுகாதார அலுவலர் கலைமணி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார், தாய் சேய் நல அலுவலர் சந்தியா, வட்டார மருத்துவ அலுவலர் சூர்யகுமார், நகராட்சி கமிஷனர் லீமா சைமன், பள்ளி ஆசிரியர்கள், உள்ளிட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.