Perambalur: Diesel-laden lorry catches fire; 24,000 litres of diesel saved!
கள்ளக்குறிச்சி மாவட்டம் பலப்பட்டு கிராமத்தை சேர்ந்த அருள் (26), என்ற டிரைவரும், அரசன் குப்பத்தை சேர்ந்த வேல்முருகன்(21), என்ற கிளீனரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு சொந்தமான 24 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் லாரியில் டீசல் ஏற்றிக்கொண்டு நேற்றிரவு
சென்னையில் இருந்து மதுரை நோக்கி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
பெரம்பலூர் அருகே உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே, இரவு 11.30 மணியளவில் வந்த போது, டிரைவருக்கும் கிளீனருக்கும் தூக்கம் வந்ததால் டேங்கர் லாரியை சாலையோரம் நிறுத்தி தூங்கி விட்டு இன்று காலை மதுரை நோக்கி புறப்பட்டனர். சுங்கச்சாவடியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற நிலையில் டேங்கர் லாரியின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவரும் கிளீனரும் உடனடியாக லாரியை நிறுத்தி தீயணைப்பானை கொண்டு தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால், கட்டுக்குள் வராமல் தீ வேகமாக பரவியதால் பதட்டம் அடைந்த டிரைவர் அருளும் கிளீனர் வேல்முருகனும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியதுடன், தீ விபத்து குறித்த தகவலை அவசர உதவி எண்ணிற்கு அழைத்து தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் உதவியுடன் தீயை அணைத்து காட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்த போதிலும், டேங்கர் லாரின் முன் பகுதி எரிந்து சேதமடைந்ததோடு, அப்பகுதியை கரும்புவை சூழ்ந்தது.
இந்த திடீர் தீ விபத்து சம்பவத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு மீட்பு படையினரும் போலீசாரும் மேற்கொண்ட தொடர்பு விசாரணையில் டேங்கர் லாரியில் இருந்த டீசல் சேதம் அடையவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது.