Perambalur: Financial assistance for those attending the Dhamma Chakra Pravartana festival!
தமிழ்நாட்டைச் சேர்ந்த பவுத்தர்கள் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்த்தன திருவிழாவில் கலந்து கொண்டு திரும்புபவர்களுக்கு நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5,000/- வரை மானியம் வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டு பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பவுத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்ப படிவத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இருப்பிடத்திலிருந்து புனிதப் பயணம் சென்று மீண்டும் இருப்பிடம் திரும்பிய வரை பயணித்த அனைத்து பயணச்சீட்டுகள் (பேருந்து / ரயில் / பயணச்சீட்டுகள்), நாக்பூரில் தொகை செலுத்தி தங்கியிருப்பின் தங்கிய இடத்தில் செலுத்திய தொகைக்கான ரசீது, புனிதப்பயணம் நிறைவுச் சான்றிதழ் (படிவத்தில்), பயணம் மேற்கொண்ட அனைவரின் ஆதார் அட்டை நகல், விண்ணப்பதாரரின் வங்கி சேமிப்பு கணக்கு புத்தக முதல் பக்க நகல், விண்ணப்பதாரர் மற்றும் குடும்ப உறுப்பினரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருமான சான்றிதழ், விண்ணப்பதாரர் மற்றும் குடும்ப உறுப்பினர் புத்த மதம் என்பதற்கு ஆதாரமாக ஒரு சான்று ஆகியவை சான்றிதழ்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 15.11.2026-க்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை -600005, என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.