பெரம்பலூர்: மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்; பல முன்னோடித் திட்டங்களைக் கொண்டு வருவேன்; அதிமுக வேட்பாளர் இளம்பை இரா. தமிழச்செல்வன் வேண்டுகோள்!

schedule
2026-04-19 | 20:03h
update
2026-04-19 | 20:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: “Give me another opportunity; I will introduce many pioneering schemes”—AIADMK Candidate Ilambai R. Tamilselvan appeals.

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 3 ரோடு, மாரியம்மன் கோவில், TELC ஸ்கூல், பங்களா ஸ்டாப், கே.கே.நகர், அரசு குடியிருப்பு, வெங்கடேசபுர காலனி, சங்கு சமீபம், கடைவீதி, பெருமாள் கோவில், அண்ணா நகர், கல்யாண நகர், அரணாரை, வடக்கு குடியிருப்பு ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் இளம்பை இரா.தமிழ்செல்வன், நகர செயலாளர் ராஜபூபதி ஏற்பாட்டில் தீவிர வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அரணாரை அடுத்த வடக்கு குடியிருப்பு பகுதியில் வேட்பாளர் தமிழ்ச்செல்வன் பேசியதாவது:

அன்பார்ந்த பொதுமக்களே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தை உங்கள் கமலப் பாதங்களில் பணிவோடு சமர்ப்பிக்கின்றேன். உங்களுடைய பொன்னான வாக்குகளை, கண்ணான வாக்குகளை, முத்தான வாக்குகளை 23-ஆம் தேதி நடைபெறுகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் மூன்றாம் எண் பட்டணான இரட்டை இலைச் சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை முத்திரையிட்டு எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பைத் தாருங்கள், வெற்றி பெறச் செய்யுங்கள். உங்களுக்கு நன்றியுள்ளவனாக, உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து பல முன்னோடித் திட்டங்களைக் கொண்டு வருவேன். வாக்களிப்பீர்! வாக்களிப்பீர்! உங்கள் சின்னம், உங்கள் சின்னம், நமது சின்னம், நமது சின்னம் இரட்டை இலை. வெற்றி பெறச் செய்வீர்! வெற்றி பெறச் செய்வீர்! நன்றி, வணக்கம்.” என பேசினார்.

முன்னதாக, கடந்த 10 ஆண்டுகள் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த போது 250 படுக்கைளுடன் 5 அடுக்கு மாடி கொண்ட அரசு மருத்துவமனை கட்டிடம், பக்கத்து மாவட்டத்தினரும் பயன்பெறும் வகையில் தாய் – சேய் மகப்பேறு பெறும் சீமாங் மருத்துவமனை, அரசு கல்லூரி, விசுவக்குடி நீர்த்தேக்கம் உள்ளிட்ட பல பணிகளையும்,

Advertisement

அதிமுக ஆட்சிக்கு அமைந்ததும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உதவி தொகை 10 ஆயிரம் வழங்கப்படும், அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் விலையில்லா பிரிட்ஜ் வழங்கப்படும், நெல் உற்பத்தியில் விவசாயிகளின் நலனுக்காக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3500 என நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கரும்பு உற்பத்தியில் விவசாயிகளின் நலனுக்காக கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4500 என நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும்,

முதல் கட்ட வாக்குறுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளவாறு: அனைத்து குடும்ப தலைவிக்கும் மாதம் 2000 ரூபாய் உதவித்தொகை, ரூ. 25 ஆயிரம் மானியத்தில் அம்மா இருசக்கர வாகனம், ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம், 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும், அம்மா இல்லம் திட்டத்தில் அனைவருக்கும் இலவச வீடு கட்டித் தரப்படும் என்றும்,

இரண்டாம் கட்ட வாக்குறுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளபடி: குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் வாழ்வாதார உதவியாக வழங்கப்படும், ஜல்லிக்கட்டு போட்டியில் பலத்த காயமடைந்த வீரர்களுக்கு 2 லட்சம் வழங்கப்படும். மாணவர்களுக்கு கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும், முதியோர் உதவித்தொகை ரூ.2 ஆயிரம் ஆக உயர்த்தப்படும், ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழக்கும் மாடுபிடி வீரர்களின் குடும்பத்திற்கு தல ரூ.10 லட்சம் வழங்கப்படும், மாற்றுத்திறனாளிகளுக்காக கூட்டுறவு வங்கி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், சிறுபான்மை பெண்களுக்கு சுய தொழில் தொடங்க வட்டி இல்லா கடன் வழங்கப்படும் .

3ம் கட்ட வாக்குறுதிகளாவன: +2 வரை படித்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். மீன்பிடி காலங்களில் வழங்க நிவாரணம் ரூ. 8 ஆயிரத்தில் இருந்து ரூ.12000 ஆக உயர்த்தப்படும். விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் ஆயிரம் யூனிட்டில் இருந்து 1400 ஆக வழங்க உயர்த்தப்படும். பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ. 1000 வழங்கப்படும். கைத்தறி நெசவாளருக்கான இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக அதிகரிக்கப்படும். நடைபாதை வியாபாரிகள் பெற்ற கூட்டு வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்து தீவிர பிரச்சாரம் செய்தார். தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். வேட்பாளருக்கு பட்டாசுகள் வெடித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.

முன்னாள் எம்.எல்.ஏ பூவை. த. செழியன், பாஜகவை சேர்ந்த தவசி. அன்பழகன், தேவேந்திர குல வேளாளர் நலச்சங்க நிறுவனர் ஜெயபாலாஜி, லாடபுரம் த. கருணைராஜா, மாவட்ட அண்ணா தொழிற் சங்க தலைவர் வீரபாண்டியன், பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் உமாஹைமாவதி, பாஜக முன்னாள் மாவட்ட செயலாளர் வாலிகண்டபுரம் செல்வராஜ், தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த பாமக, பாஜக, தமாக, உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், மகளிர் அணியினர் உள்பட திரளாக கலந்து கொண்டு வேட்பாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 20:31:48
Privacy-Data & cookie usage: