பெரம்பலூர், ஜுன் :2 – பிற்ப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் பணிபுரியும் விடுதி காப்பாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.நந்நதகுமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நந்தக்குமார் தெரிவித்தாவது:
தமிழ்நாடு அரசால் பெரம்பலூர் மாவட்டத்தில் 7 பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதிகளும்;, 4 பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதிகளும், 9 மிகப் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதிகளும், 6 மிகப் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதிகளும், ஒரு மிகப்பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர் விடுதியும், 3 மிகப் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதிகளும், ஒரு மிகப் பிற்படுத்தப்பட்டோர் தொழில்நுட்ப கல்லூரி மாணவியர் விடுதியும் ஆக மொத்தம் 31 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவர் – மாணவியர்களும், கல்லூரி – பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐடிஐ படிப்புகளில் பயிலும் மாணவ – மாணவியர்களும், விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் பயின்று வருகின்றனர;.
அரசு விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளில் பெரும்பாலானவர்கள் அவர்களின் குடும்பத்தின் சூழ்நிலைகாரணமாகவும், பொருளாதார நிலை காரணமாகவும் இந்த விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர். எனவே விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான குடிநீர், மின்வசதி மற்றும் சுகாதாரமான உணவு, உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளதை முதலில் உறுதி செய்ய வேண்டும்.
அவ்வாறு அமையப்பெறாத விடுதிகளில் தனிக்கவனம் செலுத்தி அக்குறைகளை களைய விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்க்கைக்கு தேவையான நல் ஒழுக்கங்களையும் விடுதி காப்பாளர்கள் போதிக்க வேண்டும். மேலும் வாழ்க்கையில் வெற்றி இலக்கை அடைய கல்வி ஒன்றே சிறந்த வழி என்பதனை அவர்களுக்கு நினைவுப்படுத்த வேண்டும், என பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி, மாவட்ட பிற்ப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் தேவிகாராணி, மற்றும் விடுதி காப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.