பெரம்பலூர்: குன்னம் தொகுதியில் நன்றி தெரிவித்த சிவசங்கரிடம், கூட்டணி குறித்து ஆதங்கம் தெரிவித்த மூதாட்டி!

schedule
2026-05-22 | 16:59h
update
2026-05-22 | 17:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: In the Kunnam constituency, an elderly woman expressed her grievances regarding the alliance to Sivasankar, who was there to offer his thanks.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வான சிவசங்கர் இன்று வேப்பூர் தெற்கு ஒன்றியத்தில் வாக்காளர்களுக்கு ஒன்றிய செயலாளர் மருவத்தூர் சி.ராஜேந்திரன் தலைமையில் நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:

திமுக முன்னேற்ற கழக தலைவர், மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுடைய வேட்பாளராக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், எழுச்சித் தமிழர் அண்ணன் திருமாவளவன் அவர்களுடைய வேட்பாளராக, தேசிய முற்போக்கு திராவிட கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவோடு போட்டியிட்ட எனக்கு, உதயசூரியன் சின்னத்திலே வாக்களித்து வெற்றி பெற வைத்த உங்களுக்கெல்லாம் என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முழுவதும் வழங்கியிருந்தாலும், ஆட்சிப் பொறுப்பை மீண்டும் கைப்பற்ற இயலாத சூழல். ஆனால் நம்முடைய தொகுதியில் நம்முடைய முதல்வருடைய திட்டங்களை நீங்கள் ஏற்றுக்கொண்டு, மீண்டும் கழகத்தை வெற்றி பெற வைத்திருக்கிறீர்கள். தொடர்ந்து நம்முடைய பகுதியினுடைய வளர்ச்சிக்கு, ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் என்னுடைய கடமையை நான் ஆற்றுவேன் என்ற உறுதியை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

சட்டமன்றத்தில் நம்முடைய இளந்தலைவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றிருக்கின்ற வேளையில், அவருடைய தலைமையிலே நம்முடைய தொகுதியினுடைய குரலாக, உங்கள் குரலாக தொடர்ந்து உழைத்திருப்பேன். மூன்றாவது முறை நம்முடைய தொகுதியிலே உங்கள் வீட்டு பிள்ளையாக என்னை இந்த வெற்றி வாய்ப்பை நீங்கள் வழங்கி இருக்கிறீர்கள். அதற்கு என்றைக்கும் நன்றி கடன் பட்டவனாக பணியாற்றுவேன் என்ற உறுதியை அளித்து, இந்த வெயில் நேரத்திலும் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்திருக்கின்ற உங்களுக்கெல்லாம் நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி, நன்றி, வணக்கம். என பேசினார்.

அவர் ஒதியம் கிராமத்தில் நன்றி தெரிவித்த போது, அருகில் நின்ற மூதாட்டி ஒருவர் கட்சியில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நமக்கு கட்சி தான் முக்கியம். தற்போது ‘கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒவ்வொன்றாக கழண்டு போயிட்டாங்க’ என தனது ஆதங்கத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் தெரிவித்தார். உடனடியாக பதிலளித்த எஸ்.எஸ்.சிவசங்கர், அவர்கள் போனால் என்ன? நாம் ஒற்றுமையாக இருப்போம் என பதிலளித்தார்.

இதனையடுத்து நாம் ஒற்றுமையாக இருந்து திமுகவை தூக்கி நிற்த்துவோம் என அந்த மூதாட்டி ஆறுதல்படுத்திக் கொண்டார். ஏற்கனவே காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவளித்த நிலையில், பின்னர் CPI, CPM, VCK, IUML, ஆகிய கட்சிகள் திமுகவிலிருந்து தவெக சென்றுள்ளது. இதில் காங்கிரஸ், விசிக, இயூமுலீ ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் பங்கேற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வேப்பூர் தெற்கு ஒன்றியத்தில் உள்ளள பனங்கூர், மருவத்தூர், பேரளி, பீல்வாடி, சித்தளி, ஒதியம், மூங்கில்பாடி, பெரியம்மாபாளையம், கரம்பியம், குன்னம், அசூர், எழுமூர், ஆய்குடி, மழவராயநல்லூர், காருகுடி, நன்னை, கிளியூர், சாத்தநத்தம், அகரம், பழைய அரசமங்கலம், வடக்கலூர், கத்தாழைமேடு, மிளகாய்நத்தம், பெருமத்தூர், பெருமத்தூர் குடிகாடு, பெ.நல்லூர், பொன்னகரம், நமையூர், S.குடிக்காடு, கீழப்புலியூர், கே.புதூர், சிறுகுடல் ஆகிய கிராமங்களில் ஊர் ஊராக கொளுத்தும் 104 டிகிரி பாரன்ஹீட் வெயிலிலும் முன்னாள் அமைச்சரும், எம்.ஏல்.ஏவுமான சிவசங்கர் கட்சியினருடன் நன்றி தெரிவித்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ துரைசாமி, ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், அழகு.நீலமேகம், முன்னாள் யூனியன் சேர்மன் பிரபாசெல்லப்பிள்ளை, அரணாரை, வைஸ் @ மோகன்ராஜ், ராஜேஷ் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் பலர் திரளாக உடன் சென்றனர். கிளைகள் வாரியாக ஆங்காங்கே பட்டாசுகள் வெடித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும், கொடி,தோரணங்கள் சகிதமாக உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.05.2026 - 14:54:05
Privacy-Data & cookie usage: