Perambalur: J.R.One Kothari: Workers staged a protest in front of the entrance gate, opposing the 12-hour workday and demanding various concessions, including a wage increase!
பெரம்பலூர் மாவட்டம், சர்க்கரை ஆலை எறையூர் கிராமத்தில் அரசு சிப்காட் தொழிற்பேட்டையில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ஜே.ஆர். ஒன் கோத்தாரி ஃபுட்வேர் பிரைவேட் லிட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
எம்.என்.சி., கம்பெனி ஆன இதில் பெரம்பலூர், அரியலூர், கடலூர், உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 6 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் தலா 8 மணி நேரம் வீதம் ஒரு ஷிப்ட்டுக்கு 2000 பேர் என்ற அடிப்படையில் 3 ஷிப்ட்டுகளாக அனைத்து விதமான பிடித்தமும் போக எட்டாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் மாதச் சம்பளத்திற்கு பணியாற்றி வந்தனர்.
இதன் மூலம் நாள்தோறும் 12 ஆயிரம் காலணிகள் முதல் 15 ஆயிரம் காலணிகள் வரை வியட்நாம் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தயாரிக்கப்படுகிறது. இதன் மதிப்பு ஐந்து முதல் ஆறு கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தொழிலாளர்கள் பணி புரியும் 3 ஷிப்ட்டுகளை 2 ஷிப்ட்டுகளாக மாற்றி கூடுதலாக 4 மணி நேரம் பணியில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளர்களுக்கு, ஒரு மணி நேரத்திற்கு 38 ரூபாய் முதல் 40 ரூபாய் என கணக்கீடு செய்யப்பட்டு அன் அக்கவுண்டாக வாரம் ஒரு முறை வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்துள்ள தொழிலாளர்கள் வழக்கம் போல் 3 ஷிப்ட்டுகளாக தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பணி நீக்கம், தொழிலாளர்களை மிரட்டுவது உள்ளிட்ட தொழிலாளர்கள் விரோத போக்கை கைவிட வேண்டும், தரமான உணவு வழங்க வேண்டும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை பணியை புறக்கணித்து, நுழைவாயில் முன் அமர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகத்தின் மிரட்டலுக்கு பயந்து ஒரு சிலர் மட்டுமே பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளர்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார், நிர்வாக தரப்பினருடன் சேர்ந்து தொழிலாளர்களிடம் நிர்வாகத்திற்கு ஆதரவாக சமாதான பேச்சு வார்த்தையில் நடத்தி வருகின்றனர். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தந்தால் மட்டுமே தாங்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்வோம் என திட்டவட்டமாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக எறையூர் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதனிடையே ஜே.ஆர்.ஒன் கோத்தாரி ஃபுட்வேர் பிரவேட் லிட் நிர்வாகத்திற்கு சட்ட ஆலோசராக பணியாற்றி வரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர், இது எம்.என்.சி கம்பெனி என்றும், இதனை தொடங்கிய ஒன்றரை இரண்டு வருடங்களில் பல்வேறு கஷ்டங்களை நிர்வாகம் சந்தித்து வரும் நிலையில், தொழிலாளர்கள் கூட்டமாக கூடிய கம்பெனி முன் அமர்ந்து போராட்டம் என மிரட்டுவது நியாயம் இல்லை என்றும்! அவர்களிடம் என்ன பேசுவது? என்றும், தொழிலாளர்களின் கோரிக்கையை உரிய ஆலோசனைக்கு பின்னரே பரிசீலிக்க முடியும் என்றும், பொது மக்களின் நலன் கருதி செயல்படும் நிலையில், இதே போல வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தால், வடநாட்டு வாலிபர்களை கொண்டு வந்து பணியில் அமர்த்தி விடுவோம் என்றும், நீங்கள் அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தையின் போது அருமையாக பேசினீர்கள் என்று தலைமை காவலர் ஒருவரை தோளில் தட்டிக் கொடுத்து, பேசும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க ஆரம்பிக்கப்பட்ட கம்பனி ஊதிய உயர்வு கேட்டதும் வடமாநிலத்தவர்களை குறைந்த சம்பளத்திற்கு பணி அமர்த்துவோம் என்ற மிரட்டல் அப்பகுதி மக்களை கோபமடைய செய்துள்ளது. இது மட்டுமல்லாமல் சில வாரங்களுக்கு முன்பு விசிக வின் வேர்களைத் தேடி பயண கூட்டத்தில் நிலத்தடி நீரை மாசுப்படுத்தும் பீனிக்ஸ் கோத்தாரி கம்பனியை நிரந்தரமாக மூட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.