Perambalur: “Just as I brought the Visuvakudi Reservoir project to fruition, I will construct a branch canal from there to the Annamangalam Lake,” pledged AIADMK candidate Ilambai R. Tamilselvan during his election campaign.
பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இளம்பை இரா.தமிழச்செல்வன் இன்று காலை முதல் வேப்பந்தட்டை மேற்கு ஒன்றித்தில் அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சங்காடு, அரசலூர், அன்னமங்கலம், விசுவக்குடி, முஹம்மது பட்டினம், பிள்ளையார் பாளையம் பகுதியில் தனது தேசிய ஜனநாயக கூட்டணியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். அப்போது அன்னமங்கலம் 4 ரோடு பஸ் ஸ்டாப்பில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது பேசியதாவது:
நிச்சயமாக என்னை வெற்றிபெறச் செய்யுங்கள், அதே கிளை வாய்க்காலைக் கொண்டு வந்து நம்முடைய பெரிய ஏரியை நிரப்புவேன் என்று சொன்னேன். ஆனால் நீங்கள் மாறாக, அவர்கள் தந்த பொய்யான வாக்குறுதி, கற்பனைக்கும் எட்ட முடியாத வாக்குறுதியை நம்பி நீங்கள் வாக்களித்தீர்கள். ஐந்தாண்டு காலத்தில் உருப்படியான ஏதாவது ஒரு திட்டத்தை அன்னமங்கலத்திற்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கொண்டு வந்தார்களா? அப்படி கொண்டு வந்தால் சொல்லுங்கள். மீண்டும் உங்கள் பாதம்பணிந்து கேட்கிறேன். இங்கே படித்தவர்கள் அதிகம் உள்ளவர்கள். அரசியலை நன்கு தெரிந்தவர்கள் நீங்கள்.
யாரால் இந்த ஊருக்கு நன்மை செய்ய முடியும் என்பதை எண்ணிப்பார்த்து, மீண்டும் எனக்கொரு வாய்ப்பளித்து இரட்டை இலை சின்னத்திலே வெற்றிபெறச் செய்கிறபோது, விசுவக்குடி அணையிலிருந்து கிளை வாய்க்கால் அமைத்து அன்னமங்கலத்திலிருக்கும் ஏரியை நிரப்புவேன்.
எங்களுடைய முதலமைச்சர் எடப்பாடியார் ஒரு விவசாயி. அதனுடைய நன்மையை அறிந்தவர். நானும் ஒரு குறு விவசாயினுடைய பையன். நிச்சயம் எப்படி 50 ஆண்டு காலத் திட்டமான டேம்மைக் கொண்டு வந்தோமோ, அதேபோல கிளை வாய்க்காலை அமைப்பேன். ஆகையால், இரட்டை இலை சின்னத்திற்கு எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இங்கே செல்லுகிற நம்முடைய வேப்பந்தட்டைக்குச் செல்கிற, பெரம்பலூர் – வேப்பந்தட்டை இணைக்கிற சாலையில், இந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தைத் தாண்டி இருக்கிற அந்தப் பாலம் தரைப்பாலமாக இருந்தது. அங்கே பார்த்தால் குப்பை மேடாக இருந்து கொண்டிருந்தது. நான் பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்காக அன்னமங்கலம் வருகிற போது பார்த்து பதபதைத்துதான், நம்முடைய ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் அதை உயர்மட்ட மேம்பாலமாக அமைத்திட வேண்டும் என்று அரசாணை பெற்று நிதி ஒதுக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நாங்கள் கொண்டு வந்த திட்டத்திற்கு ஸ்டிக்கரை ஒட்டி, டெண்டரை வைத்து அந்தப் பாலத்தைக் கட்டியிருக்கிறார்கள். அதற்கு முதலிலே வித்திட்டவன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சட்டமன்ற உறுப்பினராக தமிழ்ச்செல்வன் இருந்தபோது…
இப்படி பல முன்னோடித் திட்டங்கள் நம்முடைய அன்னமங்கலத்திற்குக் கிடைத்திட, வருகின்ற மக்களை வாஞ்சையோடு அழைத்து பேசி, இந்த வாக்களித்த மக்களுக்கு என்ன வேண்டும் என்று எளிய முறையிலே அணுகக்கூடிய எனக்கு, மீண்டும் இரட்டை இலை சின்னத்திலே வாக்களித்து எடப்பாடியாரை முதலமைச்சராக வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று பொற்பாதம் பணிந்து கேட்டு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!” என பேசினார்.
வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர்கள் டி.என். சிவப்பிரகாசம், ரவிச்சந்திரன், மாவட்ட இணை செயலாளர் ராணி, வெங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ், வெங்கலம் லட்சுமி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் வீரபாண்டியன், வக்கீல் ராமசாமி, எசனை பன்னீர்செல்வம், அன்னமங்கலத்தை சேர்ந்த வேப்பந்தட்டை முன்னாள் யூனியன் சேர்மன் ஜெயலட்சுமி கனகராஜ், முன்னாள் கீழப்புலியூர் ஊராட்சி தலைவர் ப. நடராஜன், வேப்பந்தட்டை செல்லப்பிள்ளை, கிருஷ்ணாபுரம் மாலதி, வடகரை முருகேசன் உள்பட அதிமுக, பாஜக, பாமக, ஐஜேகே அமமுக, புதிய தமிழகம், மக்கள் ராஜ்ஜியம், தமிழக நாயுடு கூட்டமைப்பு, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சியினர் திரளாக கலந்து கொண்டு வீதிவீதியாக வாக்குகளை சேகரித்தனர்.