Perambalur: Lawyers boycott court proceedings!
பெரம்பலூர் வழக்கறிஞர் சங்கம் நிர்வாக குழுவின் அவசர கூட்டம் நேற்று மாலை சங்கதலைவர் இ. வள்ளுவன்நம்பி தலைமையில் நடந்தது. அதில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள நீதித்துறை நடுவர் எண் .5 செல்வி. லட்சுமி பிரியா என்பவர் வழக்கறிஞர் ஒருவர் கொடுத்த பிணை மனுவை வாங்க மறுத்தும் அதை விளக்கம் கேட்க சென்ற சங்க நிர்வாகிகளின் மேல் நீதிமன்ற அவமதிப்பு விளக்க நோட்டீஸ் அனுப்பியும், மேலும் அவர்களை குற்றவாளியாக பாவித்தும் தினசரி வாய்தா போட்டு குற்றவாளிகளை கூப்பிடுவது போல் அதில் உள்ள நபர்களை வகையறா என்று நீதிமன்ற ஊழியர்களை வைத்து வெளியில் அழைத்தும் கேவலப்படுத்தியும், அதில் இறுதியாக வழக்கறிஞர்கள் நிர்வாகிகளுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்து நீதித்துறை வரலாற்றில் இல்லாத அவமானத்தை வழக்கறிஞர்களுக்கு உருவாக்கியுள்ளார்.
திறந்த நீதிமன்றத்தில் வெளிப்படையாகவே வழக்கறிஞர்களிடம் தனக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சிபாரிசு நேரடியாக உள்ளது என்றும்> என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் வழக்கறிஞர்களை கேவலமாக பேசி அவமானப்படுத்தி வருகிறார். இதில் உச்சபட்சமாக வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளுக்கு அபராதம் விதித்தது வழக்கறிஞர்களிடையே மிகவும் மன வருத்தத்தை உருவாக்கியுள்ளது. இந்நிகழ்வுகளை இச்சங்கம் வன்மையாக கண்டிக்கும் வகையில் இன்று முதல் இரண்டு நாட்கள் மட்டும் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்ற பணிகளிலிருந்து சங்க உறுப்பினர்கள் விலகியிருப்பதன ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டு இன்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், செயலாளர் வி.சேகர், பொருளாளர் பி.சிவராமன் உள்பட மூத்த வழக்கறிஞர்கள், சங்க உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.