Perambalur: Minister S.C. Sivashankar distributed free housing land titles to 530 people!
தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், வருவாய்த்துறையின் மூலம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னம் மற்றும் ஆலத்தூர் வட்டங்களைச் சேர்ந்த 530 பயனாளிகளுக்கு ரூ.5.33 கோடி மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை இன்று கலெக்டர் ந.மிருணாளினி தலைமையில் கொளக்காநத்தம் ஊராட்சியில் வழங்கினார். முன்னாள் யூனியன் சேர்மன் என்.கிருஷ்ணமூர்த்தி, முன்னிலை வகித்தார். அப்போது, அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் பட்டா வழங்க வேண்டும் என பல ஆண்டு காலமாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், அதற்கு தீர்வு காணும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவரின் தொடர் நடவடிக்கையால், மாவட்ட வருவாய் அலுவலரின் முயற்சியால் வருவாய்த்துறையினர், நில அளவை துறையினர் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்தையடுத்து, இன்றைய தினம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னம் வட்டாரத்தில் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் 4 பயனாளிகளுக்கு ரூ.7லட்சத்து 22 ஆயிரத்து 431 மதிப்பிலும், இணைய வழி மூலம் 374 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 74 லட்சம் மதிப்பிலும், ஆலத்தூர் வட்டாரத்தில் இணைய வழி பட்டா மூலம் 152 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 52 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 530 பயனாளிகளுக்கு ரூ.5 கோடி 33 லட்சத்து 22 ஆயிரத்து 431 மதிப்பிலான வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படுகின்றது. இதன் மூலம் குன்னம் மற்றும் ஆலத்தூர் வட்டங்களைச் சேர்ந்த மக்களின், பல ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் படி இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் வட்டத்தில் 4,532 பயனாளிகளுக்கும், வேப்பந்தட்டை வட்டத்தில் 5,579 பயனாளிகளுக்கும், குன்னம் வட்டத்தில் 5,941 பயனாளிகளுக்கும் ஆலத்தூர் வட்டத்தில் 5,651 பயனாளிகளுக்கும் என 21,703 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, என தெரிவித்தார். அரசு அலுவலர்கள் மற்றும் கொளக்காநத்தம் முன்னாள் ஊராட்சித் தலைவர் என். ராகவன், மாவடட திமுக இளைஞரணி அமைப்பாளர் வ. சுப்பிரமணி உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.