பெரம்பலூர்: அறநிலையத்துறையின் அலட்சியம்; தேர் அச்சு முறிந்ததால் மற்றொரு தேர் மீது சாய்ந்தது!! நல்வாய்ப்பாக அமைச்சர் சிவசங்கர் பக்தர்கள், போலீசார்கள் உயிர் தப்பினர்!

schedule
2025-07-08 | 14:15h
update
2025-07-08 | 14:42h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Negligence of the Charitable Trusts Department; The chariot fell on another chariot due to a broken axle!! Fortunately, the devotees Minister Sivashankar escaped unhurt!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட துங்கபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தேனூர் – கோவில்பாளையம் கிராமத்தில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த ஸ்ரீ அய்யனார்-பூரணி புஷ்கலாம்பிகை மற்றும் கருப்பையா, மாரியம்மன், முருகன், செல்லியம்மன், விநாயகர், செம்மலையப்பா கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்

அதேபோல் இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 8 நாட்களுக்கு முன்னர் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக தொடங்கியது. திருவிழாவையொட்டி நாள்தோறும் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை மற்றும் திருவீதி விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று தேனூர் கோவில்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு போட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் திருவிழா இன்று காலை தொடங்கியது.

Advertisement

அழகிய மர வேலைபாடுகளுடன் கூடிய தேரில் வண்ண சீலைகள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட 30 அடி உயரம் கொண்ட மூன்று திருத்தேர்களில் மேற்கண்ட சுவாமிகள் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்த வண்ணம் வீற்றிருந்தனர்.

மூன்று தேர்களையும் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்களுடன் அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்த நிலையில், ஸ்ரீ அய்யனார் பூரணி புஷ்கல அம்பிகை வீற்றிருந்த திருத்தேரின் அடிப்பகுதியில் இருந்து அச்சு முறிந்தது. அலங்காரப் பகுதி மட்டும் பக்கவாட்டில் திடீரென சாய்ந்து விழுந்தது. பாதி சாய்ந்த நிலையில் அலங்காரப் பகுதி தொங்கிய படி இருந்ததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை!

இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது இதனை தொடர்ந்து, திருத்தேரில் சாய்ந்த அலங்காரப் பகுதியை பொதுமக்கள் உள்ளிட்ட பக்தர்கள் சீரமைத்து வருகின்றனர். சேதமடைந்த தேரை சீர் செய்து புதுப்பிப்பதற்கான செலவை அமைச்சர் சிவசங்கர் தனது சொந்த செலவில் சீர் செய்து கொடுப்பதாக தெரிவித்தார்.

கோவில் தேர் திருவிழாவின் போது, அலங்காரப் பகுதி மட்டும் சாய்ந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. குன்னம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். அறநிலையத்துறைக்கு உட்பட்டது இக்கோயில்கள். கோயில் அலுவலர்கள் தேருக்கு இரும்பு சக்கரம் பொருத்தாமலும், உரிய பாராமரிப்பு மேற்கொள்ளாமலும் விட்டதே இத்தேர் அச்சு முறிவிற்கு காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

காணிக்கையாக அளிக்கும் பக்தர்களின் பணத்தை அறநிலையத்துறை உரியமுறையில் செலவிட வேண்டும். தேர் திருவிழாக்களின் போது, அரசு விதிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மண்டலத்தில் உள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் பக்கதர்கள், கோவில்களின் தேவை என்ன என்பதை தெரிந்து கொள்ளாமல் தன்னிச்சையாக செயல்படுவதே இது போன்ற அசம்பாவிதங்களுக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.06.2026 - 02:35:46
Privacy-Data & cookie usage: