Perambalur: New subsidized electric motor pump sets for farmers; Collector’s announcement!
பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல்துறை மூலம் நிலத்தடி நீர்ப்பாசனத்தை உயர்த்த விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய புதிய மின் மோட்டார் பம்ப் செட்டுகள் வழங்கும் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. இதன் மூலம், விவசாயிகள் பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்கு பதிலாக புதிய மின் மோட்டார் பம்ப் செட்டு வழங்குவதற்கும், புதியதாக ஆழ்த்துளை கிணறு மற்றும் திறந்த வெளி கிணறு உருவாக்கப்பட்டு புதிய மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுக்கும் மானியத்துடன் கூடிய மின் மோட்டார் பம்ப் செட்டுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தற்போது, 2026-27 ஆம் நிதியாண்டிற்கு, பொது பிரிவு விவசாயிகளுக்கு 14 எண்களும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 2 எண்களும் என மொத்தம் 16 விவசாயிகளுக்கு ரூ.2.,40 இலட்சம் மானியத்தில் வழங்கிட இலக்கு பெறப்பட்டுள்ளது. இதற்கு 50 % அல்லது அதிக பட்சமாக ரூ.15,000/- ஆகிய இரண்டில் எது குறைவோ அந்த தொகை பின்னேற்பு மானியமாக விவசாயின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், விவசாயி அடையாள எண், மின்இணைப்பு சான்றிதழின் நகல், வங்கி புத்தகத்தின் முதல்பக்க ஒளிம நகல், சாதி சான்றிதழின் நகல் (ஆதிதிராவிட, பழங்குடியின பிரிவை சேர்ந்தவராக இருப்பின்) ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை பெரம்பலூர் உபகோட்ட உதவி செயற்பொறியாளர்(வே.பொ) அலுவலகத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்துக்கொள்ளலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நுண்ணுயிர்பாசன மேலாண்மை தகவல் அமைப்பு இணையதளம் மூலம் வேளாண்மை அல்லது தோட்டக்கலை துறைகளில் சொட்டுநீர் அல்லது தெளிப்பு நீர்பாசனத்திற்கு பதிவு செய்து 7 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். விருப்பம் கொண்ட விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. அவ்விண்ணப்பங்களை வட்டார அளவில் செயல்படும் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களில் பணிபுரியும் உதவி பொறியாளர் (வே.பொ) களிடம் சமர்ப்பிக்கலாம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு பெரம்பலூர், தண்ணீர்பந்தல், ரோவர் கல்லூரி பின்புறம் வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தினை நேரிலோ அல்லது 7708506988, 9994036266 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்,