Perambalur: Public blockades road demanding 100 days of work!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், ஓகளூர் ஊராட்சிக்கு உட்பட்ட கழனிவாசல் கிராமத்தில் இன்று காலை 100 நாட்கள் வேலையை முறையாக வழங்க கோரி அக்கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில், முறையாக 100 நாட்கள் வழங்கவும், மோசமான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும், தெருவிளக்குகளை சரி செய்து தரவும், கிடப்பில் இருக்கும் கழிவு நீர் வாய்க்காலை விரைந்து பணிகளை முடிக்கவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கட்டுமான விரைந்து முடிக்கவும்,
புதுப்பிக்கப்பட்ட பழைய நூலக கட்டிடத்தை திறந்து பயன்பாட்டிற்கு விடக்கோரியும், சுடுகாடு பாதையை மற்றும் கொட்டகையை சீரமைத்து தர வேண்டியும் கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியாக வந்த பேருந்துகள் நீண்ட நேரம் வரிசையில் நின்றன. இது குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் மற்றும் வருவாய், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவதாக உறுதி அளித்தன் பேரில் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.