Perambalur: Two Youths Arrested in Case of Attempted Murder by Hacking After Breaking into House; Police Take Action!
பெரம்பலூர் மாவட்டம், வரகுபாடி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் மணிகண்டன் (25). அதே பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் ஸ்டீபன் (30). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். இதற்கிடையில் அதே பகுதியை சேர்ந்த மதுபாலன் என்பவருடன் இவர்கள் 2 பேருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. அடிக்கடி குடிபோதையில் மணிகண்டன், மதுபாலன் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் தகராறு முற்றியதில், குடிபோதையில் மணிகண்டன் மற்றும் ஸ்டீபன் ஆகிய 2 பேரும் சேர்ந்து, மதுபாலனின் வீடு புகுந்து வந்து சரமாரியாக அரிவாளால் தாக்கினர். இதில், மதுபாலனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததும், மணிகண்டன், ஸ்டீபன் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
அங்கிருந்தவர்கள், மதுபாலனை மீட்டு பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மருவத்தூர் போலீசார் வரகுபாடியை சேர்ந்த சக்திவேல் மகன் மணிகண்டன் பாஸ்கர் மகன் ஸ்டீபன் ஆகியோரை இன்று கைது செய்து பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.