Perambalur: Vote for the DMK to safeguard culture and religious harmony; Campaigning in support of DMK candidate Jayalakshmi; A. Raja MP delivers a speech.
பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட லாடபுரம், குரும்பலூர், செட்டிகுளம், பாடாலூர், வி.களத்தூர் பகுதிகளில் திமுக வேட்பாளர் ஜெயலட்சுமியை ஆதரித்து திமுக துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான ஆ.ராசா தீவிர பிரச்சாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்த அவர் பேசியதாவது:
அதிமுக ஆட்சியில் கொரோனா தொற்று பரவியபோது, ரூ.4 லட்சம் கோடி கடன் வாங்கி தமிழகத்தை தவிக்க விட்டு சென்றவர் எடப்பாடி பழனிசாமி. திமுக ஆட்சியில்தான் அந்த கடன் சுமை நீக்கியது. பொது முடக்க காலங்களில் எடப்பாடி பழனிசாமி வீட்டில் முடங்கி கிடந்தார். ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்கினார்.
சென்னை வெள்ளத்தில் தத்தளித்தபோது, களத்தில் இறங்கி பணியாற்றியவர் மு.க.ஸ்டாலின். தமிழகத்திற்கு தீங்கு விளைத்த மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. தமிழகம் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய் வரிப்பணத்திற்கும் மத்திய அரசு 26 பைசா மட்டும் திருப்பி வழங்குகிறது. ஆனால், குஜராத், உத்தர பிரதேச மாநிலங்களுக்கு ரூ.1.50 வழங்கப்படுகிறது. கல்விக்கான நிதி கிடைக்க வேண்டும் என்றால் கூட இந்தி படிக்க வேண்டி இருக்கிறது.
குடும்ப பெண்களுக்கு வழங்கப்படும் ரூ.1000 உதவி தொகையால், கிராம பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. கிராம பெண்கள் பெறும் உதவி தொகை, அப்பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகளில்தான் மாற்றப்படுகிறது. பள்ளி, கல்லூரி கட்டணம் செலுத்த பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.2 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும்.
போக்குவரத்து நெரிசலை குறைக்க செட்டிகுளத்தில் புதிய புறவழிச்சாலை அமைக்கப்படும். செட்டிகுளத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளின் உயர் கல்விக்காக பொறியியல் கல்லூரி கொண்டு வரப்படும். பா.ஜனதா கூட்டணி ஆட்சி வந்துவிட்டால், மத நல்லிணக்கத்தை பாதுகாக்க முடியாது. பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் அம்பேத்கர்கரின் கொள்கை, கலாச்சாரதை பாதுகாக்க முடியாது. எனவே, கலாச்சாரம், மத நல்லிணக்கத்தை பாதுகாக்க மீண்டும் மக்கள் உதயசூரியன் சின்னத்தில் திமுகவிற்கு வாக்களித்து வேட்பாளர் ஜெயலட்சுமிய வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பேசினார்.
மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், ஒன்றிய செயலாளர்கள் ராஜ்குமார், வல்லபன், ஜெகதீஸ்வரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவிஜெயபால் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.