பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் ஐய்யப்ப சுவாமி திருவீதி உலா வாணவேடிக்கையுடன் நடைபெற்றது.
கன்னிசாமி பூஜை
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் அய்யப்ப பக்தர்கள் சுமார் 50 பேர் மாலையணிந்தனர். கடந்த ஒரு மாத காலமாக நித்திய பூஜை நடத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து முதலாம் ஆண்டு மாலையணிந்த கன்னிசாமிகள் இணைந்து கன்னிபூஜை நடத்தினார்கள். அப்போது பல மலைசுவாமிகளின் (ஓராண்டுக்கும் மேல் மாலையணிந்தவர்கள்) காலில் விழுந்து வணங்கி பாதபூஜை செய்தார்கள். தொடர்ந்து அனைத்து அய்யப்ப பக்தர்கள் சார்பிலும் பெரியபூஜை நடைபெற்றது. அப்போது 18 படிகளுடன் கூடிய அய்யப்பசுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. பக்தர்கள் சாப்பிட்ட இலையை கன்னிசாமிகள் பயபக்தியுடன் எடுத்து சரண கோஷங்கள் முழங்கி அருலுள்ள வேதநதி ஆற்றில் ஓடும் தண்ணீரில் இலையை விட்டு நீராடி வந்தனர். கடந்த 8 வருடங்களாக ஆற்றில் தண்ணீர் வராததால் இதுபோன்ற விழா கொண்டாடமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாமி ஊர்வலம்
தொடர்ந்து அய்யப்பசுவாமி புலி வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக வாணவேடிக்கையுடன் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் சிறப்பு ஆராதனை செய்து சாமிக்கும்பிட்டனர்.