பெரம்பலூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிமெண்ட் பேக்டரி டெக்னிசியன் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி துரோபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் போஸ் மகன் பார்த்தீபன்(27), ஐடிஐ., எலக்ட்ரிக்கல் படித்த இவர் கடந்த 10 வருடங்களாக அரியலூர் மாவட்டத்திலுள்ள தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் டெக்னிஷியனாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் இன்று தன்னுடன் பணியாற்றும் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள டிவி.புதூரைச் சேர்ந்த சின்னதம்பி மகன் முருகன் என்பவருடன் காரில் பெரம்பலூரை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, (கல்பாடி)எறையூர் பிரிவு பாதைக்கும், கவுல்பாளையம் கிராமத்திற்கும் இடையே உள்ள ஒரு வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்தகார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்த பார்த்தீபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய நண்பர் முருகன் காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவலறிந்த ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.