வங்கியில் வாங்கிய கடன் 1 கோடி ரூபாயை திரும்ப செலுத்தாத தொழிலதிபரின் வீடு, அலுவலகம் பூட்டி சீல் வைப்பு: சார் ஆட்சியர் உத்தரவின்பேரில் வங்கி அதிகாரிகள் நடவடிக்கை
பெரம்பலூர் அருகே தொழிலதிபர் ஒருவர் பாரத ஸ்டேட் பேங்கில் 1கோடி ரூபாய் கடன் பெற்று, கடனை மீண்டும் செலுத்தாததால் உதவிஆட்சியர் உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட தொழிலதிபரின் வீடு மற்றும் கல் குவாரி ஆகியவற்றை வங்கி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள மங்களமேடு கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் மகன் பழனியாண்டி(46). கல் குவாரி மற்றும் டிப்பர் லாரி வைத்து தொழில் செய்து வந்த தொழிலதிபரான இவர் கடந்த 2010ம் ஆண்டு பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியிலுள்ள வங்கியில் 1 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து கடன் பெற்று பல மாதமாகியும் கடன் நிலுவைத்தொகையை வேலாயுதாம் திரும்ப செலுத்தவில்லை என தெரிகிறது. இதனையடுத்து பழனியாண்டியை தொடர்பு கொண்ட வங்கி அதிகாரிகள் கடன் தொகையை திரும்ப செலுத்த வேண்டுமென நேரடியாகவும், தபால் மூலமாகவும் பலமுறை அறிவுறுத்தியுள்ளனர். அதனை பழனியாண்டி ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை என தெரிகிறது. இதனால் வங்கி அதிகாரிகள் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனதனர். மனுவை விசாரணை செய்த சார் ஆட்சியர் மதுசூதண ரெட்டி சம்மந்தப்பட்ட கடன் தாரரின் சொத்துக்களை பறிமுதல் செய்திட உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து பழனியாண்டிக்கு சொந்தமான முருக்கன்குடி பாதையில் உள்ள ஒரு கல் குவாரி மற்றும் மங்களமேடு கிராமத்திலுள்ள ஒரு மெத்தை வீட்டையும் மங்களமேடு போலீஸ் துணை சூப்பிரண்ட் கோவிந்தராஜன் தலைமையில் போலீசார் மற்றும் வேப்பந்தட்டை தாசில்தார் தமிழ்செல்வன் முன்னிலையில் வங்கி முதன்மை மேலாளர் ரெங்கராஜன், மண்டல மேலாளர் பத்மநாபன் உள்ளிட்ட வங்கி அதிகாரிகள் பறிமுதல் செய்து பூட்டி சீல் வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.