IAS, promotion to officer; Congratulations to the Chief Minister from Perambalur District

ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ள, பெரம்பலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பெரம்பலுார் மாவட்டம், அரும்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் – ராஜம் தம்பதிகளின் மகன் தர்ப்பகராஜ் (47) எம்.ஏ., பி.எல்., பட்டதாரியான இவர், 2005ம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று, துணை ஆட்சியராக அரசு பணியில் சேர்ந்தார். பயிற்சி முடிந்து முதலில் நீலகிரி மாவட்டம், குன்னுாரில் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றினார். பின்னர், கோயம்புத்துார் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணியாற்றினார்.

இதன்பின், மாவட்ட வருவாய் அதிகாரியாக பதவி உயர்வு பெற்று, மதுரை மாநகராட்சி துணை ஆணையர், சென்னை பெருநகர மாநகராட்சி உதவி ஆணையர், திருச்சிராப்பள்ளி மாவட்ட வருவாய் அலுவலர், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய பொது மேலாளர், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன சட்ட அலுவலர் போன்ற பணியிடங்களில் பணிபுரிந்துள்ளார்.

தற்போது, தமிழக அரசின் இணை மாநில மரபு அலுவலராக ( state joint protocol officer) பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பதவி உயர்வில் ஐ.ஏ.எஸ்., ஆக பணி உயர்வு பெற்று உள்ளார். ஐ.ஏ.எஸ்., ஆக பதவி உயர்வு பெற்றதற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலினை சமீபத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பெரம்பலுார் மாவட்டத்தில் ஏற்கனவே, சுப்பையா என்பவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக உள்ள நிலையில், இரண்டாவது ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இவர் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஜோதிராணி என்ற மனைவியும், நறுமுகை என்ற மகள், மகிழ்நன் என்ற மகன் உள்ளனர். இவருக்கு 8 சகோதரர்கள், 3 சகோதரிகள் உள்ளனர். இவர்களில், இருவரை தவிர மற்ற அனைவரும் அரசு பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!