In Perambalur sugar mill crushing Open: Farmers struggle to run the plant without proper service
பெரம்பலூர் எறையூர் சர்க்கரை ஆலை முறையாக பராமரிப்பு பணி செய்யாமல் ஆலை தொடங்குவதாக குற்றம் சாட்டி விவசாயிகள் அதிகாரிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் பொதுத்துறைக்கு சொந்தமான அரசு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. கடந்த 38 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த ஆலையில் இன்று 2016-17 ஆண்டுக்கான அரவைப் பருவத்திற்கான துவக்க விழா இன்று நடைபெற்றது. 5288 விவசாயிகளால் 11 ஆயிரத்து 455 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பை அரவைக்குப் பயன்படுத்த உள்ளதாகவும், இதில் விளைச்சலாக 3.5 லட்சம் மெட்ரிக் டன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 2.75 லட்சம் மெட்ரிக் டன் அரவை செய்யவும், மீதமுள்ள 50 ஆயிரம் மெட்ரிக் டன்கள் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும், 25 ஆயிரம் மெட்ரிக் டன்கள் கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பில் உள்ள எம்.ஆர். கிருஷ்ணரூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் கரும்பு பரிமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், நாளை துவங்கும் இந்த அரவைப் பருவம், வரும் மே.16- தேதி நிறைவடைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆலைக்கு வெளியே விவசாயிகள் விவசாய சங்கத்தினர் ஒன்று திரண்டு முறையாக ஆலை பராமரிப்பு செய்யப்படாமல் ஆலையை ஆண்டு தோறும் இயக்குவதால் அவ்வப்போது பழுதாகி அரவை நிறுத்தப்படுகிறது. இதனால் ஆண்டு முழுவதும் பயிரிட்ட கரும்பி அறுவடைக்கு பின்னர், ஆலைக்கு எடுத்து சென்று அரவை செய்யாமல் வயலிலேயே காய்ந்து வீணாகும் நிலைமை ஆண்டுதோறும் ஏற்பட்டு கொண்டே உள்ளது. பல முறை போராட்டங்கள் நடத்தியும், ஆலை முறையாக புணர் அமைக்காமல் ஒவ்வொரு ஆண்டும் இயக்குவதால் விவசாயிகள் வாங்கிய கடனை கட்டமுடியாமல் திண்டாடி வருவதாக தெரிவிக்கின்றனர். மேலும், ஆலை நிர்வாகம் சென்ற ஆண்டுகளில் வெட்டப்பட்ட கரும்பிற்கு நிலுவைத் தொகை வழங்காமலேயே ஆண்டுதோறும் விவசாயிகளை வேதனைக்கு உள்ளாக்குவதாக கூறி கண்டன ஆர்ப்பாட்டம் ஆலை முன்பு நடத்தினர். இதனால் ஆலை முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.