Woman Commits suicide near Perambalur for Debt troubles
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, பெரியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் மணி – கல்யாணி (வயது 30), தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று, 2 மகன்கள் உள்ளனர்.
இதனிடையே குடும்ப செலவிற்காக, நிதி நிறுவனங்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் வாங்கிய கடனை கல்யாணி திரும்பத் தர முடியாமல் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார்.
டிரைவரான மணி வழக்கம் போல், பணிக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் மகன்களுடன் இருந்த கல்யாணி கடன் தொல்லையால் மனம் உடைந்து ஒரு அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக தாழிட்ட, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை இவர்களது குடும்ப நண்பரான அதே பகுதியை சேர்ந்த விஜயபாஸ்கர் (வயது 24) என்பவர் பார்த்து அதிர்ச்சியடைந்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்த, அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கல்யாணியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடன் தொல்லையால் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.