public can edit the details of Aadhaar Aadhaar enrollment centers || ஆதார் விவரங்களை திருத்தம் செய்ய ஆதார் சேர்க்கை மையங்களில் செய்யலாம்
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது.
பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையில் திருத்தங்கள் ஏதும் செய்ய விரும்பினால், இம்மையங்களுக்குச் சென்று கைரேகை அல்லது கருவிழியினைப் பதிவு செய்து தங்களது பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும், புகைப்படம், கைவிரல் ரேகை மற்றும் கருவிழி ஆகியவற்றையும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
அதற்காக ஆதார் பதிவு செய்தலை கட்டணமில்லாமலும், 5 மற்றும் 15 வயது முடிந்தவர்களுக்கான கட்டாய கைவிரல் ரேகை மறுபதிவை கட்டணமில்லாமலும், பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட நிலைப்புள்ளி விவரங்களை திருத்தம் செய்வதற்கு ரூ.25-ம், புகைப்படம், கைவிரல் ரேகை, கருவிழி புதுப்பிக்க ரூ.25- ம், ஆதார் விவரங்களை தாளில் அச்சிட்டு பெற்றுக் கொள்வதற்கு ரூ.10- ம் கட்டணமாக செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் மேற்கண்ட நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில், பொது மக்களுக்கு வழங்கப்படும் படிவங்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது. பொதுமக்கள் தவறாமல் ஒப்புகைச் சீட்டை, மையத்தில் பணிபுரியும் தரவு உள்ளீட்டாளரிடமிருந்து கேட்டு பெற்றுக்கொள்ளலாம். சேவை தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருப்பின் 1800 425 2911- என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.