Rain in early morning in Perambalur district, Flooding in the Kallaru River !!
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதலே பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. ஆனால், மாவட்டத்திற்கு போதுமான மழை தென்மேற்கு பருவ மழை காலத்திலோ, தற்போது நடக்கும் வடகிழக்கு பருவ மழையாலோ பெய்யவில்லை. எசனை போன்ற பெரிய பெரிய ஏரிகளில் சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்ட காணப்படுகிறது. அரசு போதுமான வறத்து வாய்க்கால்களை தூர்வாராததால் இன்னும் பல நீர்நிலைகளுக்கு தண்ணீர் வந்து சேர்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை பச்சைமலை சாரலில் பெய்த மழையால் மலையாளப்பட்டி பகுதியில் உள்ள கல்லாற்றில் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிரம்பி வழிந்தோடியது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மலையாளப்பட்டி, சின்னமுட்லு, கொட்டாரக்குன்று, பூமிதானம், புதூர், பெரியசாமி கோவில், மற்றும் பாசனம் பெறும் அரும்பாவூர், மேட்டூர், தழுதாழை தொண்டைமாந்துறை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும்.
இன்று காலை வரை பதிவான மழையளவு விவரம் (மி.மீ):
பெரம்பலூர் 11, அகரம்சிகூர் 40, லப்பைக்குடிக்காடு 31, புதுவேட்டக்குடி, 12, எறையூர் 28, கிருஷ்ணாபுரம் 18, தழுதாழை 22, வி.களத்தூர் 13, வேப்பந்தட்டை 25, செட்டிக்குளம் 18, பாடாலூர் 28 என மொத்தம் 245 மி.மீ பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 22.27 மில்லி மீட்டராகும்.