Sewerage works in 4 road area: Perambalur collector inspection!
பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் கழிவு நீர் கால்வாய் கால்வாய் கட்டும் பணியை கலெக்டர் கற்பகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நெடுஞ்சாலைத்துறையின் மூலம் கட்டப்பட்டு வரும் கழிவு நீர் கால்வாய் பணிகளை பார்வையிட்ட கலெக்டர், நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் குழாய்களை முறையாக சேதம் இல்லாமல் கழிவுநீர் கால்வாய்க்கு வெளிப்பகுதியில் அமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், சாலையின் இருபுறங்களிலும் கழிவுநீர் தேங்காத வகையில் முழுமையாக தூர்வாரி கடைக்கோடி பகுதி வரை கழிவு நீர் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மழைக்காலங்களில் பெரம்பலூர் மாவட்டத்தின் நகரப் பகுதிகளிலும் ஊரகப் பகுதிகளிலும் எங்குமே கழிவு நீர் மற்றும் மழைநீர் தேங்காத வகையில் முறையாக தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொசுக்கள் உருவாகாத வகையில் முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மழை நீர், தேங்கி நிற்காமல் எளிதில் வழிந்தோடும் வகையில் கால்வாய் பணிகளை அமைக்க வேண்டும் எனவும். மழைக்காலம் வருவதற்கு முன்பு பணிகளை விரைந்து முடித்து கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்துறைகள் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது நகர்மன்றத் தலைவர் அம்பிகா இராஜேந்திரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல். என். ராஜேந்திரன் மற்றும் தாசில்தார் கிருஷ்ணராஜ் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.