Soft drink to quench the thirst of the summer Perambalur collector notification
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பு;
கோடை காலங்களில், நீர்சத்தும், உப்புசத்தும் உடலுக்கு அதிகம் தேவைப்படுகிறது. இதனால் கோடையில் தாக்கும் நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகளை மக்கள் அனைவரும் கடைபிடிக்கவேண்டும். அதன்படி, உணவு பொருட்கள், உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு பெற்றுள்ளதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
உணவு விற்பனை செய்யும் கடைகள் சுகாதாரமாக இருக்க வேண்டும். குளிர்பானம் தயாரிக்கும் நபரும், கடையும், சுகாதாரமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். கூழ், மோர், பால், தண்ணீர் ஆகியவை துருப்பிடிக்காத பாத்திரங்களில் வைத்திருக்க வேண்டும்.
ஐஸ்கட்டி தயாரிக்கும் தண்ணீரும் சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தமான தண்ணீர் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் ஐஸ்கட்டி, பாதுகாப்பாக வைத்திருக்கும் பழங்கள், ப்ருட் சாலட் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெப்பத்தில் பழவகைகள் எளிதில் அழுகும் என்பதால் குளிர்பதனபெட்டிகளில் வைக்கவேண்டும்.
மேலும், பழச்சாறு, தண்ணீர், குளிர்பானங்களில், உணவு பாதுகாப்பு பதிவு மற்றும் காலாவதி தேதிகளை சரிபார்த்து பயன்படுத்தலாம். பழச்சாறு எடுக்கும் மிக்ஸி, ஜூஸர், வடிகட்டி போன்றவை துருப்பிடிக்காமல் தூய்மையாக இருக்க வேண்டும்.
பழ ரசத்தை கையில் படாமல், கரண்டி வாயிலாக பரிமாற வேண்டும். அழுகிய பழங்களை, சாறு தயாரிக்க பயன்படுத்த கூடாது. சர்பத், குளிர்பானங்களில், அங்கீகரிக்கப்படாத நீலம், ஊதா ஆகிய நிறமிகளை சேர்க்கக்கூடாது. அதுபோன்ற நிறமி கலந்த சர்பத் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
ஐஸ் கட்டிகளை, சாக்கு பை, வைக்கோல் மூடி வைக்க கூடாது. குளிர்பானங்கள், பழச்சாறுகளை நேரடியாக பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த வேண்டும்.
நேரடியாக ஐஸ் கட்டி போட்டு தரும் குளிர்பானங்களை பயன்படுத்தவேண்டாம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு நலன் கருதி, குளிர்பானங்கள், பழச்சாறு நறுக்கிய பழங்களை, பாலித்தீன் கவர்களில் வாங்குவதை தவிர்க்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.