#Tamil Development Department on behalf of the college students’ poetry, essay, speech contest
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகைக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குக் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகின்ற 23.12.2016 அன்று காலை 9 மணிக்குப் பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (இருபாலர்) நடைபெற உள்ளது.
இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரால் அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் தங்கள் கல்லூரி முதல்வரை அணுகி விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து கல்லூரி முதல்வரின் ஒப்பம் பெற்று போட்டி நடைபெறும் நாளன்று, போட்டிகள் நடைபெறும் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு (இருபாலர்) காலை 9 மணிக்கு வருகை தந்து போட்டியில் கலந்து கொள்வதற்கான வருகைப் பதிவேட்டில் ஒப்பமிடவேண்டும்.
ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதற்பரிசாக தலா ரூ. 10, ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.7 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 5 ஆயிரமும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.
போட்டிகளில் முதற் பரிசுப் பெற்றவர்கள் மட்டும் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவார்கள். மாநிலப் போட்டித் தொடர்பான தகவல் பின்னர் தெரிவிக்கப்படும்.
மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (பொ,) முனைவர் க.சிவசாமி போட்டியின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். இந்த அரிய வாய்ப்பினைப் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.