PMK Ramadoss’s mourning for the death of former Chief Minister Janakiraman

பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தி:

புதுவை மாநில முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான ஆர்.வி.ஜானகிராமன் உடல்நலக் குறைவால் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

புதுவையில் மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்த ஜானகிராமன் தமது கடுமையான உழைப்பால் அரசியலில் படிப்படியாக முன்னேறி முதலமைச்சராக உயர்ந்தார். ஏழை மக்களின் துயரங்களை நன்றாக உணர்ந்திருந்ததால் அவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை தயாரித்து செயல்படுத்தினார். அதனால் தான் புதுவை நெல்லித்தோப்பு தொகுதியிலிருந்து 5 முறை சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.

அரசியலைக் கடந்து என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். எனக்கு நல்ல நண்பர். 1996-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு புதுவையில் அரசியல் குழப்பம் நிலவிய போது, பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவுடன் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டார்.

ஜானகிராமனின் மறைவு அவரைச் சார்ந்தவர்களுக்கு பெரும் இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திமுகவினருக்கு எனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!