தேர்தல் செலவின கணக்குகளை சமர்ப்பிக்காத சுயேட்சை உள்பட இரு வேட்பாளர்கள் மீது வழக்கு பதிவு : பிரச்சார வாகனத்திற்கான அனுமதியும் ரத்து

schedule
2016-05-15 | 17:58h
update
2026-06-26 | 22:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவின கணக்குகளின் 3 ம் கட்ட ஆய்வுகள் தேர்தல் செலவின பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கையின்படி, தமிழ்நாடு சட்ட பேரவைக்கான பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. இதனையொட்டி பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 147. பெரம்பலூர் (தனி) சட்டப் பேரவை தொகுதி மற்றும் 148. குன்னம் சட்டப் பேரவை தொகுதிக்கு, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவின பதிவேடுகள் மற்றும் கணக்கு அறிக்கைகளின் மீதான ஆய்வுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின்படி, ஏற்கனவே இரண்ட கட்ட ஆய்வுகள் மே 6, 10 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்துள்ளன.

3-வது கட்ட தேர்தல் செலவினம் மீதான ஆய்வு மே 14-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலும்,

மத்திய தேர்தல் செலவின பார்வையாளர்கள் ராஜேஷ் கவாலி (பெரம்பலூர; தொகுதி) மற்றும் பிஜு தாமஸ் (குன்னம் தொகுதி) முன்னிலையிலும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

Advertisement

14.05.2016 அன்று நடைபெற்ற ஆய்வில் மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே அறிவித்துள்ள கால அட்டவணையின்படி, காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தேசிய , மாநில அளவிலான பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன.

பிற்பகல் 2.30 மணி மதல் 5.00 மணிவரை தேசிய மற்றும் மாநில அளவிலான பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த ஆய்வில் பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தமது முகவர்கள் வாயிலாக தேர்தல் செலவின கணக்குகளை ஆய்வுக்கு தாக்கல் செய்தனர்.

உதவி செலவின பார்வையாளர்கள், மாவட்ட கணக்கு பதிவுக் குழு அலுவலர்கள், மாவட்ட செலவின கண்காணிப்பு குழு அலுவலர்கள் மற்றும் தேர்தல் செலவின கண்காணிப்பு குழு ஒருங்கிணைப்பு அலுவலர் ஆகியோர் கணக்குகளை ஆய்வு செய்தனர்.

தேர்தல் செலவின கணக்குகளில் குறைபாடுகளை கண்டறிந்து குன்னம் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கு விளக்கம் கேட்டு அறிவிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.

அறிவிக்கை பெற்ற 48 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்காத வேட்பாளர்களின் கணக்குகளில் உள்ள வித்தியாச தொகை முழுவதும் மாவட்ட தேர்தல் செலவின கண்காணிப்பு குழு இறுதி செய்து வேட்பாளர்களின் தேர்தல் செலவின கணக்கில் சேர்க்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து தேர்தல் முடிவு அறிவிக்கும் வரை வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் கண்காணிக்கப்படும்.

இறுதியாக, தேர்தல் முடிவுகள் அறிவிப்பு வெளியான 26-ஆம் நாள் கணக்குகள் ஒத்திசைவு செய்யப்பட்டு 30-ஆவது நாள் வேட்பாளர்களின் முழுமையான தேர்தல் செலவின கணக்குகள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கும், தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்
தெரிவித்துள்ளார்.

மேலும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் அறிவிக்கைப்படி முதல் இரண்டு ஆய்வுகளுக்கு தேர்தல் செலவின கணக்குகளை சமர்ப்பிக்காத தமிழக மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் குணாளன் மற்றும் சுயேட்சை வேட்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர்களின் தேர்தல் பிரச்சார வாகனத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டதோடு இந்திய தண்டனைச்சட்டம் 171 (ஐ) பிரிவின் கீழ் குற்றவியல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.06.2026 - 22:00:31
Privacy-Data & cookie usage: