பெரம்பலூர் மாவட்டம், மாநில அளவில் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது : கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்!

schedule
2025-09-09 | 16:13h
update
2025-09-09 | 16:13h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The pass percentage in English subject has decreased in Perambalur district and state level: Education Minister Anbil Mahesh Poyyamozhi information!

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாநில அளவிலான அடைவுத்தேர்வு 2025 குறித்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடனான ஆய்வுக்கூட்டம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தாவது: செல்வங்களில் விலைமதிப்பில்லாத செல்வம் கல்விச்செல்வம் என்ற அய்யன் திருவள்ளுவரின் வாக்கின்படி, அழிவில்லாத செல்வத்தை மாணவ மாணவிகளுக்கு வழங்கிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாட்டு மாணவ, மாணவிகளுக்கு அரசின் திட்டங்கள் மூலம் மிகச்சிறப்பான கல்விப்பாதையினை உருவாக்கி வழங்கியுள்ளார்கள். முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடங்கி, நான் முதல்வன் திட்டம், ஸ்மார்ட் வகுப்பறைகள் என ஒவ்வொரு திட்டத்திலும் மாணவ, மாணவிகளின் நலன் என்பதை ஒற்றை இலக்காக கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் திட்டங்களை வழங்கி வருகின்றார்.

Advertisement

அதனடிப்படையில் மாநில அளவில் நடத்தப்பட்ட அடைவுத்தேர்வுகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்து வருகின்றோம். இதுவரை 27 மாவட்டங்களில் ஆய்வு முடிவுற்ற நிலையில் 28 வது மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுகின்றது. மாநில அளவிலான அடைவுத்தேர்வை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 417 அரசு மற்றும அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் பயிலும் 10,551 மாணவ மாணவிகள் எழுதினர். இதில் 358 பள்ளிகள் அரசுப் பள்ளிகள். இந்தத் தேர்வில் 83.81 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 20வது இடத்தை பெரம்பலூர் மாவட்டம் பிடித்தது. மாநில வாரியான பாட சதவீதத்தை ஒப்பிடும்போது தமிழ், கணிதம், சூழ்நிலையியல், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.

இத்தேர்வின் அடிப்படையில் பெரம்பலூர், வேப்பூர் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது, ஆலத்தூர் மற்றும் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மாணவ மாணவிகளின் கற்றல் திறனை அதிகரிக்க வேண்டும், அவர்களுக்கான பள்ளிக்கல்வியை சிறப்பாக வழங்கிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அமைச்சர் பெருமக்கள், உயர் அலுவலர்கள் பள்ளிக்கு வந்தால்தான் கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என்று இல்லாமல் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்துவிட்டால் 360 டிகிரி கோணத்தில் உங்கள் கண்காணிப்பு இருக்க வேண்டும். பள்ளிக்குள் யார் வருகின்றார்கள், பள்ளியை விட்டு யார் செல்கின்றார்கள் என்பதை கவனமுடன் கண்காணிக்க வேண்டும். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பெற்றோர்கள் நிம்மதியாக இருக்கின்றார்கள் என்றால் ஆசிரியர்கள் நல்ல முறையில் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்தான்.

மாநில அளவிலான அடைவுத்தேர்வில் முன்னேற்றம் பெற வேண்டிய பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்தி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும். மற்ற மாவட்டங்களுக்கு நான் ஆய்வுக்குச் செல்லும்போது, பெரம்பலூர் மாவட்டத்தை எடுத்துக்காட்டாக சொல்லும் வகையில் உங்கள் பணி இருக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக மாநில அடைவுத்தேர்வில் முன்னேற்றமடைய என்னென்ன செய்ய வேண்டும், தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து பள்ளி தலைமையாசிரியர்களிடம் கேட்டறிந்து மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விரிவாக ஆய்வு செய்தார். அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.08.2026 - 19:27:18
Privacy-Data & cookie usage: