thirumanduraiபெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் திருமாந்துறையில் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. ராமசந்திரன் முன்னிலையிலும், மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி தலைமையிலும் இன்று மனுநீதி நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமாந்துறை பகுதியை சார்ந்த மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், ஊர் பெரியவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோரிடம் சுகாதாரம், நியாய விலைக் கடை, குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி, கல்வி, போக்குவரத்து வசதி, 108 அவசர ஊர்தி சேவை போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும், தாட்கோ திட்டம், புதுவாழ்வுத்திட்டத்தின் கீழ் கிராம வறுமை ஒழிப்பு சங்க நடவடிக்கைகள் குறித்தும் தனித்தனியாக கேட்டறிந்தார். அதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட அலுவலர்களை நேரடியாக அழைத்து அதற்குரிய விபரங்களை கேட்டறிந்து பொது மக்களிடம் எடுத்துக் கூறினார்.

மனுநீதி நாள் முகாமில் பொதுமக்கள் தங்கள்; கோரிக்கை மனுக்களை அளிக்கும்போது அதற்கான ஒப்புகைச் சான்றினையும் கட்டாயம் பெற வேண்டும். இன்று பெறப்பட்ட மனுக்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் கிராம நிர்வாக அலுவலகத்தில் தீர்வு தெரிவிக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து குன்னம் சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.டி. ராமச்சந்திரன் பேசியதாவது :

“மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்று மக்களின் நல வாழ்வு ஒன்றே தனது வாழ்வு என்று தவ வாழ்வு வாழ்ந்து வரும் நமது தமிழக முதலமைச்சர், மக்களின் வாழ்க்கை தரம் மேம்படவும், அரசின் நலத்திட்டங்கள் கடைகோடி மனிதனுக்கும் கிடைத்திட வேண்டும் என்று நமது தமிழக முதலமைச்சர் அம்மா திட்ட முகாம்கள் வருவாய் கிராமங்கள் தோறும் நடத்தப்பட்டு வருகின்றது.

இம்முகாம்கள் மூலமாக பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்கள் தொடர்பாக வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வரும் வீண் அலைச்சல் தவிர்க்கப்பட்டதுடன், அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு விரைவாக சென்றடைந்தது. மேலும் கிரமப்புற பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தும் செயல்படுத்தி வரும் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எந்நாளும் நன்றியுள்ளவர;களாக இருப்போம்.
இவ்வாறு பேசினார்.

இந்த முகாமில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண நிதியுதவியாக 53 நபர்களுக்கு ரூ.4,92,000 க்கான காசோலைகளையும், 11 நபர்களுக்கு ரூ.13 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான விதவை உதவித்தொகைக்கான ஆணைகளையும்,

இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையாக 35 நபர்களுக்கு மொத்தம் ரூ.4,37,500 க்கான காசோலைகளையும், 08 நபர்களுக்கு நத்தம் வீட்டுமனைப்பட்டாக்களையும், 48 நபர்களுக்கு பட்டா மாற்ற ஆணைகளையும், வேளாண்மைத்துறையின் மூலம் 2 நபர்களுக்கு ரூ.750 மதிப்பிலான வேளாண் இடுபொருட்களையும்,

மாற்றுதிறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 நபர்களுக்கு ரூ.11,010 மதிப்பிலான மாற்றுதிறனாளி தையல் இயந்திரங்களையும், 8 நபர்களுக்கு ரூ.43,200 மதிப்பிலான இலவச சக்கர நாற்காலிகளையும், 2 நபர்களுக்கு ரூ.7,700 மதிப்பிலான தையல் இயந்திரங்களையும் என மொத்தம் 170 நபர்களுக்கு ரூ.23 லட்சத்து 22 ஆயிரத்து 160 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் பயனாளிகளுக்கு வழங்கினார்.

இம்முகாமில் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி, வேப்பூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் கோபி, மாவட்ட வழங்கல் அலுவலர் கள்ளபிரான், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தேவிகா ராணி, தனித் துணைஆட்சியர்கள் முருகேஸ்வரி, சிவபிரியா, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் ராமகிருஷ்ணன், குன்னம் வட்டாட்சியர் ஷாஜஹான், திருமாந்துறை ஊராட்சி மன்றத்தலைவர் டி.ஆர்.சரவணன், உட்பட வருவாய்த் துறை, வளர்ச்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைச்சாந்த அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!