அதானி மின்சாரத்திற்கு அதிக விலை ஏன்? 800 மெகாவாட் மின் ஆலை 10 மாதங்களாகியும் இயங்காதது ஏன்? ரூ.41,000 கோடி கட்டண உயர்வுக்குப் பிறகும் மின்வாரிய நஷ்டம் ஏன்? பாமக அன்புமணி கேள்வி!

schedule
2024-11-29 | 07:53h
update
2024-11-29 | 07:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Why is the price of Adani’s electricity so high? Why is the 800 MW power plant not operating for 10 months? Why is the electricity board losing money even after a tariff hike of Rs. 41,000 crore? PMK Anbumani questions!

தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் கடந்த இரு ஆண்டுகளில் சுமார் ரூ.41,000 கோடி அளவுக்கு உயர்த்தப்பட்ட பிறகும், மின்சார வாரியம் தொடர்ந்து இழப்பை எதிர்கொண்டு வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிலவும் ஊழல்களும், முறைகேடுகளும் தான் இதற்கு காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும் நிலையில், அவற்றைத் தடுப்பதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

அதானி குழும நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் 1000 மெகாவாட் மின்சாரத்தை இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்தின் வாயிலாக வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்து கொள்வதற்காக தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் கையூட்டு வழங்கப்பட்டதாக அமெரிக்காவின் நியூயார்க் கிழக்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அது குறித்து விசாரணை நடத்தப் பட வேண்டும்; கடந்த ஜூலை மாதத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவுதம் அதானி சந்தித்ததாக கூறப்படுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் வலியுறுத்தியிருந்தார். அதன்பின் ஒரு வாரத்திற்கு மேலாகியும் இன்று வரை தமிழ்நாடு அரசு எந்த விசாரணைக்கும் ஆணையிடவில்லை; சந்திப்பு தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இந்த விவகாரங்கள் குறித்து மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துவிட்டதாகக் கூறி, இந்தக் குற்றச்சாட்டுகளை கடந்து செல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துடிக்கிறார். அதானி குழும நிறுவனங்களுக்கும், தமிழ்நாடு மின்வாரியத்திற்கும் கடந்த மூன்றாண்டுகளில் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளப்படவில்லை என்பது தான் செந்தில்பாலாஜி அளித்த விளக்கம். அதுவும் தவறானது.

அதானி குழுமம் தயாரிக்கும் சூரிய ஒளி மின்சாரத்தை வாங்குவதற்காக இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது; இதற்கான மின்வாரியத்தின் உயரதிகாரிகளுக்கு அதானி குழுமம் கையூட்டு கொடுத்திருக்கிறது என்பது தான் அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் சாரம் ஆகும். இந்தக் குற்றச்சாட்டுக்கு இதுவரை அரசு விளக்கமளிக்கவில்லை.

அதானி குழுமத்திடமிருந்து ஒரு யூனிட் ரூ.2.61 என்ற விலைக்கு தான் மின்சாரம் வாங்கப்படுகிறது; இது மிகவும் குறைவான கட்டணம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார். இது அப்பட்டமான பொய் என்பது மட்டுமின்றி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும். இது அன்றைய சந்தை விலையை விட 30% அதிகம். தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும், இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்தி நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தான நாள் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 16. ஆனால், அதற்கு முன்பாக 2020&ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1070 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்ய இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்தி ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியது. அதில் அல் ஜொமையா எனர்ஜி என்ற சவுதி அரேபிய நிறுவனம் 200 மெகாவாட் மின்சாரத்தையும், கிரீன் இன்ஃரா விண்ட் எனர்ஜி நிறுவனம் 400 மெகாவாட் மின்சாரத்தையும் ஒரு யூனிட் ரூ.2 என்ற விலைக்கு வழங்க ஒப்பந்தம் பெற்றன. மத்திய அரசு நிறுவனமான என்.டி.பி.சி எனப்படும் இந்திய அனல்மின் கழகம் ஒரு யூனிட் ரூ.2.01 என்ற விலைக்கு 470 மெகாவாட் மின்சாரம் வழங்க ஒப்பந்தம் பெற்றது. இதற்கான ஆதாரங்கள் இணையத்தில் உள்ளன.

Advertisement

பொதுவாக சூரிய ஒளி மின்சாரத்தின் விலை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் நிலையில், 2020&ஆம் ஆண்டில் ரூ.2 ஆக இருந்த சூரிய ஒளி மின்சாரத்தின் விலை, 2021&ஆம் ஆண்டில் மேலும் குறைந்திருக்க வேண்டும். மாறாக, 30% அதிகரித்திருக்கிறது. இதன் பின்னணியில் தான் அதானி குழுமத்திற்கும், தமிழ்நாடு மின்வாரியம் உள்ளிட்ட 5 மாநில மின்வாரியங்களுக்கும் பேரம் நடந்திருக்கிறது என புகார்கள் எழுந்துள்ளன.

அதானி குழுமத்திற்கும், 5 மாநில மின்வாரியங்களுக்கும் இடையே நடைபெற்ற பேரங்கள் தொடர்பாக புதிய ஆதாரம் ஒன்றை தி வயர் இணையதளம் வெளியிட்டுள்ளது. அதானி குழும நிறுவனங்கள் வழங்கும் சூரிய ஒளி மின்சாரத்திற்கு இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்தி நிறுவனம் அதிக விலை நிர்ணயித்திருந்த நிலையில், சந்தைவிலையை விட அதிகமாக உள்ள அந்த விலைக்கு மின்சாரத்தை வாங்க தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில மின்சார வாரியங்களும் முதலில் தயங்கின. அதானி குழுமத்தின் சார்பில் கையூட்டு பேரம் இறுதி செய்யப்பட்ட பிறகு தான் மின்சாரத்தை வாங்க தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில மின்வாரியங்களும் ஒப்புக் கொண்டன என்று தி வயர் இணைய இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் கூறப்பட்டிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அளிக்கும் விளக்கம் என்ன?

கடந்த 2015ஆம் ஆண்டில், அப்போதைய அதிமுக அரசு அதானி நிறுவனம் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைத்துள்ள சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தின் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை யூனிட்டுக்கு ரூ.7.01 என்ற விலையில் 25 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டது. அதைக் கண்டித்து அந்த ஆண்டு ஜூன் 17ஆம் நாள் மருத்துவர் அய்யா அறிக்கை வெளியிட்டார். அடுத்த சில நாட்களில் அது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அன்றைய திமுக தலைவர் கலைஞர், அடுத்து வரும் ஆண்டுகளில் சூரிய ஒளி மின்சார விலை குறையும் எனும் போது அதானியுடன் 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டது ஏன்? என வினா எழுப்பினார். கலைஞரின் வினா இப்போதும் பொருந்தும். அப்போது 25 ஆண்டு கால ஒப்பந்தத்தை விமர்சித்த திமுக, இப்போது அதே அதானியின் சூரிய ஒளி மின்சாரத்தை 25 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டது ஏன்?

2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வின் மூலம் அந்த ஆண்டின் 7 மாதங்களில் மட்டும் மின்சார வாரியத்திற்கு ரூ.23,863 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. ஆண்டு முழுவதற்கும் கணக்கிட்டால் ரூ.31,500 கோடி கூடுதல் வருமானம் கிடைத்திருக்கக்கூடும். அதற்கு முன் மின்வாரியம் ஆண்டுக்கு சுமார் ரூ.9000 கோடி இழப்பில் இயங்கி வந்தது. மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு 2022&23ஆம் ஆண்டில் மின்வாரியத்திற்கு குறைந்தது 14,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், மின்வாரியத்தின் இழப்பு அந்த ஆண்டில் 10,000 கோடியாக அதிகரித்தது. 2023&ஆம் ஆண்டில் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால், அந்த ஆண்டில் ரூ.35,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருக்கக் கூடும். அதன்படி பார்த்தால் 2023- 24ஆம் ஆண்டில் மின்வாரியம் குறைந்தது ரூ.26,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், நிதியாண்டு முடிந்து 8 மாதங்கள் ஆகியும் இன்று வரை மின்வாரியத்தின் லாப&நட்டக் கணக்கு வெளியிடப்படவில்லை. அதற்கான காரணம் என்ன?

கடந்த ஜூலை மாதம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 4.83% மின்சாரக் கட்டணம் உயர்த்தப் பட்டது. அதன் மூலம் அரசுக்கு ரூ.41,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்க வேண்டும். அதனால் நடப்பு நிதியாண்டில் மின்வாரியத்திற்கு ரூ.30,000 கோடிக்கு லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், இன்று வரை மின்வாரியம் தொடர்ந்து இழப்பில் தான் இயங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதற்கு காரணம் என்ன? கட்டண உயர்வின் மூலம் கிடைத்த வருவாயை கரையான் அரித்ததா, அணில்கள் தின்றனவா?

தமிழகத்தின் சராசரி மின் தேவை 21,000 மெகாவாட் ஆகும். இதில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சொந்த மின் உற்பத்தி வெறும் 4,332 மெகாவாட் மட்டும் தான். தமிழகத்தின் மொத்த மின் தேவையில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே தமிழக அரசால் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள ஐந்தில் நான்கு பங்கு மின்சாரம் அதிக விலை கொடுத்து தான் மத்தியத் தொகுப்புகளில் இருந்தும், தனியாரிடமிருந்தும் வாங்கப் படுகின்றன. தமிழ்நாட்டில் 17,340 மெகாவாட் மின் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு 18 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. இவை செயல்படுத்தப்பட்டிருந்தால் தமிழ்நாடு மின்சார வாரியம் தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டியிருந்திருக்காது. தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் 2100 மெகாவாட் அளவுக்கு மட்டும் தான் அனல் மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பத்தாண்டுகளில் ஒரே ஒரு மெகாவாட் அளவுக்குக் கூட அனல் மின் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.

சென்னை எண்ணூரில் பல ஆண்டு தாமதத்திற்கு பிறகு அமைக்கப்பட்ட 800 மெகாவாட் மின்னுற்பத்தி நிலையத்தை, மக்களவைத் தேர்தலில் சாதனையாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்கான மார்ச் 7&ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர அவசரமாக திறந்து வைத்தார். ஆனால், அதன்பின் 9 மாதங்கள் ஆகியும் இன்னும் அது செயல்பாட்டுக்கு வரவில்லை. இது தான் திராவிட மாடல் அரசின் லட்சனமா?

தமிழக அரசுக்கு சொந்தமான அனல்மின் நிலையங்களில் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய சராசரியாக 3.ரூபாய் மட்டும் தான் செலவாகிறது. ஆனால் தனியாரிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரம் 5.ரூபாய் முதல் 12.ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கப்படுகிறது. குறைந்த செலவில் மின்சாரம் தயாரிப்பதற்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளாமல் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கினால் தமிழ்நாடு மின்சார வாரியத்தை எவ்வாறு லாபத்தில் இயக்க முடியும்.

மின்திட்டங்களை செயல்படுத்தினால், தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க முடியாது; அதில் பெருமளவில் ஊழல் செய்ய முடியாது என்பதால் தான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்ட கட்சிகள் மின்திட்டங்களை செயல்படுத்த மின்திட்டங்களை செயல்படுத்த மறுக்கின்றன என்ற குற்றச்சாட்டுக்கு திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் விளக்கம் என்ன?

தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் ஊழல் நடைபெறும் துறைகளில் முதன்மையானது மின்சாரத்துறை தான். அதானியிடமிருந்து மின்சாரம் வாங்குவதில் தொடங்கி அனைத்து நிலைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அந்தக் குற்றச்சாட்டுகள் குறித்தும், இந்த அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள வினாக்கள் குறித்தும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டானின் விளக்கம் அளிக்க வேண்டும், என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.08.2026 - 23:45:42
Privacy-Data & cookie usage: