ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்குமா? என சந்தேகம் எழுந்துள்ளது, கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பெரம்பலூரில் பேச்சு!

schedule
2024-03-28 | 05:55h
update
2024-03-28 | 07:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Will elections be held democratically? Doubts have arisen, Communist Party’s State Secretary Mutharasan’s speech in Perambalur!

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு‌.க‌. வேட்பாளர் கே.என்.அருண்நேருவிற்கு, கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வாக்குகள் கேட்டு எளம்பலூர் கிராமத்தில் பேசியதாவது:

பாஜக கூட்டணி கட்சிகளுக்கு கேட்கும் சின்னங்களை ஒதுக்கீடு செய்யும் தேர்தல் ஆணையம், மற்ற கட்சிகள் கேட்கும் சின்னங்களை நிராகரித்து வருவது, ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்குமா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது என முத்தரசன் தெரிவித்துள்ளார் .

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேரு, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எளம்பலூர் கிராமத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கினார்.

இந்தப் பிரச்சார தொடக்க விழாவில் பங்கேற்று அருனைநேருவை ஆதரித்து வாக்கு சேகரித்து பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசியதாவது:

இந்திய கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேருக்கு உதயசூரியன் சின்னத்தில் அனைவரும் வாக்களித்து அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை தர வேண்டும்.

Advertisement

கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த வேட்பாளர்(பாரிவேந்தர்) தானாக வெற்றி பெறவில்லை! அண்ணன் நேரு அவரை வெற்றி பெறச் செய்தார்.

நடைபெற உள்ள தேர்தல் ஒரு சாதாரணமான தேர்தல் அல்ல! நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா வேண்டாமா என்கிற கேள்வியைக் கேட்டு நடைபெறுகிற முக்கியமான தேர்தல்.

முற்றிலுமாக ஜனநாயகம் அழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பானை சின்னம் நிராகரிக்கப்பட்டதே உதாரணம். அதேபோல் மதிமுக விற்கு ஒதுக்கப்பட்ட பம்பர சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட விவசாயி சின்னம் பறிக்கப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் அவர்கள் கேட்கும் சின்னத்தை பாரபட்சமாக தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து வருகிறது. அது தமிழ் மாநில காங்கிரசாக இருக்கலாம் அல்லது வேறு பல கட்சிகளாக இருக்கலாம்.

நடுநிலையோடும், நேர்மையோடும் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையமே பாரபட்சமாக செயல்படுவதால் இந்த தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறுமா என்ற கேள்விக்குறியை எழுப்பி இருக்கிறது.

ஆகவே நாம் வாக்களிப்பது என்பது நாட்டினுடைய ஜனநாயகத்தை காப்பதற்கும், அரசியல் அமைப்புச் சட்டத்தை காப்பாற்றுவதற்கும், மதச்சார்பின்மை என்ற மகத்தான கொள்கையை காப்பாற்றுவதற்கும் இந்த தேர்தலில் நாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கடமைப்பட்டு இருக்கிறோம்.

அதே போல மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஒரு மாற்றான் தாய் மனப்போக்கோடு செயல்படுகிறது. தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும், தமிழர்களையும் புறக்கணிக்கிறது. அதே நேரத்தில் உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கு சலுகைகளை வாரி வழங்குகிறது.

நம்முடைய நிதி அமைச்சர் சட்டப்பேரவையில் குறிப்பிட்டதை போல, நாம் கட்டுகிற ஒவ்வொரு ரூபாய் வரைக்கும் ஒன்றிய அரசு திருப்பிக் கொடுப்பது வெறும் 29 பைசா மட்டுமே! மற்ற மாநிலங்களுக்கும், உத்திரப் பிரதேசத்திற்கும் இரண்டு ரூபாய் வழங்குகிறது.

தமிழகத்திற்கு குறைத்து வழங்கப்படுகிறது இதனை எல்லாம் நாம் கவனத்தில் கொண்டு, ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்படக்கூடிய ஒன்றிய பாஜக அரசை நாம் நிராகரிக்க வேண்டும்.

எதிர்த்தரப்பில் அமைக்கப்பட்டு இருக்கிற கூட்டணி என்பது நள்ளிரவு கூட்டணி! மற்றொன்று கள்ளக் கூட்டணி என்பதை நாம் கவனத்தில் கொண்டு, ஜனநாயக முறையில் இயங்கிக் கொண்டிருக்கிற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கு தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். என்று பேசினார்.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர், பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ., பிரபாகரன், முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார், மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன், மதிமுக மாவட்ட செயலளார் ஜெயசீலன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சுரேஷ், மற்றும் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர். உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
31.08.2026 - 12:26:49
Privacy-Data & cookie usage: