பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், திருவாளந்துறை கிராமத்திலுள்ள அருள்மிகு தோளீஸ்வரர் திருக்கோவிலுக்கு அருகில், தமிழர் திருநாளான பொங்கல் விழாவினை முன்னிட்டு, வருகின்ற ஜன.14 அன்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சுற்றுலா பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
இவ்விழாவில், கிராமிய முறையில் பொது மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடவும், கிராமப்புற கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தெருக்கூத்து, நாதஸ்வரம் மற்றும் நாட்டுப்புற பாடல்கள் போன்ற கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கலை நிகழ்ச்சிகளில் 700க்கும் மேற்பட்ட கிராமியக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க உள்ளனர்.
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சியும், மகளிர்சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சியும் சிறப்பாக நடத்தப்படவுள்ளது.
மேலும், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, உரியடித்தல், கயிறு இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல், வாலிபால் மற்றும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சாக்கில் ஓடுதல் மற்றும் தேக்கரண்டியில் எலுமிச்சை பழத்துடன் ஓடுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் வீரர், வீராங்கனைகள் தங்களது விண்ணப்பங்களை திருவாளந்துறை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
இவ்விழாவில் திருவாளந்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள பொது மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பொங்கல் விழாவினை சிறப்பிக்க வேண்டும், என அதில்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.