Perambalur: 9,919 candidates wrote TNPSC – Group 4 exam; Collector visited!
தமிழ்நாடு அரசுப் பணியார் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் தொகுதி 4 தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் கலெக்டர் ச.அருண்ராஜ் இன்று நேரில் பார்வையிட்டார்.
பெரம்பலூர் வட்டத்தில் 27 மையங்களில் 8,179 பேர்களும், ஆலத்தூர் வட்டத்தில் 3 மையங்களில் 743 பேர்களும், குன்னம் வட்டத்தில் 5 மையங்களில் 1,464 பேர்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் 6 மையங்களில் 1,510 பேர்களும் என மொத்தம் 41 மையங்களில் 11,896 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 9,919 நபர்கள் தேர்வு எழுதினார்கள். மீதமுள்ள 1,977 நபர்கள் தேர்வெழுத வரவில்லை.
தேர்விற்காக வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் பாதுகாப்பான முறையில் தேர்வு மையங்களுக்கு எடுத்து செல்வதற்கும், தேர்வு முடிவுற்ற பின்னர் விடைத்தாள்கள் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைப்பதற்கும் 20 குழுக்கள் (Mobile Team) நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும், துணை ஆட்சியர்கள் தலைமையில் 5 பறக்கும் படைகளும் நிமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. காவல்துறையின் சார்பில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தது. பெரம்பலூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் மற்றும் மாவட்டத்தின் இதர பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக தேர்வு மையங்களுக்கு சென்று வர அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.
பெரம்பலூர் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.