Perambalur: Career guidance programs to continue till July 15; Collector informs!
தமிழக அரசு ஒவ்வொரு வருடத்தின் ஜுலை மாதத்தின் இரண்டாம் வாரத்தினை தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் வாரமாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் வாரத்தினை, பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக பல்வேறு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் 15.07.2025 வரை நடத்தப்பட உள்ளது.
சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜுலை. 9 அன்று கவுதம புத்தர் அறக்கட்டளை பள்ளியிலும், ஜுலை. 10 அன்று கீழக்கணவாய் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில், மாணவர்களுக்கான உயர்க்கல்வி, போட்டித் தேர்வுகள், தனியார் துறை வேலைவாய்ப்பு, சுயவேலைவாய்ப்பு ஆகியவை குறித்து தொழில்நெறி வழிகாட்டல் மற்றும் திறன்பயிற்சிகள் குறித்தும், மகளிருக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரம்பலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி நடந்தது.
வேப்பந்தட்டை அரசு கலைக் கல்லூரியில் ஜுலை.14ம் தேதி அன்றும், பெரம்பலூர், குன்னம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜுலை.15ம் தேதிய அன்றும் நடைபெற உள்ளது.
ஜுலை இரண்டாவது வாரம் முழுவதும் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தால் நடத்தப்படும் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான வகுப்புகள், மெய்நிகர் கற்றல் வலைதளம் மற்றும் வேலைநாடுநர்களுக்காக துவங்கப்பட்டுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு இணையம் ஆகியவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி இணையதளத்தில் பதிவு செய்துக்கொள்ள வேலைநாடுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்கள் இந்த நல்லவாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.