Perambalur: Collector consults with all department officials to implement Ungaludan Stalin!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செயல்படுத்துவது தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ச.அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசின் சேவைகள் அனைத்து தரப்பு பொதுமக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் கிடைத்திடும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். இத்திட்டம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகர்ப்புறம் ஊரகப் பகுதிகளில், 10,000 முகாம்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடத்தப்படவுள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் நகர் மற்றும் கிராமப்புறத்தில் 86 முகாம்கள் நடைபெறவுள்ளது.
இம்முகாம் தொடர்பாக தன்னார்வலர்களும் மகளிர் சுய உதவிக்குழுக்களும் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்களை வழங்கி பல்வேறு அரசுத்துறைகளின் திட்டங்கள் மற்றும் சேவைகளை விவரித்து வழங்கிட வேண்டும். இப்பணியினை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள மேற்பார்வை அலுவலர்கள், பொறுப்பு அலுவலர்கள், அனைத்து வீடுகளுக்கும் விண்ணப்ப கோரிக்கை படிவம் மற்றும் தகவல் கையேடுகளை வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்திட வேண்டும். மேலும் இம்முகாம் தொடர்பாக பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி முகாம் நடைபெறும் நாளில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு , அரசின் திட்டங்களை பயனடைய அனைத்து நிலை அலுவலர்களும் பணியாற்றிட வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 08 முகாம்கள் 15.07.2025 அன்று (செவ்வாய் கிழமை) முதல் 18.07.2025 (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாம்கள் காலை 09.00 மணியிலிருந்து மதியம் 03.00 வரை நடைபெறும். முகாம் தொடர்பான பணிகளை அனைத்து அலுவலர்களும் சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அருண்ராஜ் அப்போது தெரிவித்தார்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடர்பாக ஆர்.டி.ஓ பொறுப்பு ச.சுந்தரராமன் மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சொர்ணராஜ் ஆகியோர் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 1 வது மற்றும் 2 வது வார்டு தில்லை நகர் பகுதி மற்றும் என்.எஸ்.கே திருமண மண்டபம் மெயின்ரோடு பகுதிகளில் நகராட்சி தன்னார்வலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் வீடு வீடாக விண்ணப்ப படிவம் மற்றும் முகாம் குறித்த தகவல் கையேட்டினை வழங்கி முகாம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இக்கூட்டத்தில் டிஆர்.ஓ வடிவேல் பிரபு, மாவட்ட தாட்கோ மேலாளர் கவியரசு, ஆதிதிராவிடர் நல அலுவலர் வாசுதேவன் உள்ளிடட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.