Perambalur: Government bus collides with a car; two people killed after being trapped under the bus wheels when the car door opened!



பெரம்பலூர் அருகே அரசு பேருந்து கார் மீது மோதிய விபத்தில், காரின் கதவு திறந்து கொண்டதால், பஸ் சக்கரத்தில் சிக்கிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், இரூர் அருகே உள்ள காரைப் பிரிவில் மேம்பாலம் கட்டும் பணி ஓராண்டாக நடந்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலையில் மாற்றம் செய்யப்பட்டு செல்கிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 2.15 மணியளவில் சென்னையில் இருந்து விருதுநகரை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த கார் ஆலத்தூர்கேட் அருகே சென்ற போது பின்னால் விழுப்புரத்தில் இருந்து மதுரையை நோக்கி அரசு பேருந்து சென்றது. அதனை, விருதுநகர் மாவட்டம் வடமலைக்குறிச்சியை சேர்ந்த சவுந்தரராஜன் மகன் சரவணகுமார் (38) என்பவர் ஓட்டினார். அந்த பேருந்து. கார் மீது தாறுமாறாக மோதியது. இதில் காரில் வந்த விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த தென்னாட்டு பிள்ளை மகன் ஆனந்தமுத்து (50), ராஜேந்திரன் மகன் ஹரிஹரன் (36) ஆகியோர் சம்பவ இடத்திலேயே காரில் இருந்து தூக்கி வெளியே வீசப்பட்டு பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் உடன் வந்த தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த குருநாதன் மகன் பாலமுருகன் (45), தலையில் காயத்துடன், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற வாகனங்கள் சுமார் 2 மணி நேரம் தாமதமாக சென்றன. போக்குவரத்தை போலீசார் சீர் செய்தனர். விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இருப்பினும் நடத்துனர் பயணிகளை மாற்றுப் பேருந்தில் ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.










kaalaimalar2@gmail.com |
9003770497