Perambalur: People belonging to Buddhism, Jainism and Sikhism can apply to go on a pilgrimage: Collector’s information!
தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தளங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்களுக்காக தமிழக அரசால் ஆண்டுதோறும் நபர் ஒருவருக்கு ரூ.10,000 வீதம் 120 நபர்களுக்கு ரூ.12 இலட்சம் நிதி உதவி வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த புத்த, சமண மற்றும் சீக்கியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இப்புனித பயணம் புத்த மத தொடர்புடைய பீகாரில் உள்ள புத்த கயா, உத்திரப்பிரதேசத்தில் உள்ள குசிநகர், வாரணாசியில் உள்ள சாராநாத் கோவில், பீகாரில் எள்ள ராஜ்கீர், வைசாலி, நேபாளத்தில் உள்ள லும்பினி போன்ற புனித தளங்களையும்,
சமண மத தொடர்புடைய இராஸ்தானில் உள்ள தில்வாரா கோவில், ரணக்பூர் சமண கோவில், ஜெய்சல்மர் சமண கோவில், ஜார்கண்டில் உள்ள சிக்கர்ஜி, குஜராத்தில் உள்ள பாடலினா, பீகாரில் உள்ள பவபுரி சமண கோவில் போன்ற இடங்கள், கர்நாடகாவில் சரவணபெலகோலா போன்ற புனித தளங்களையும் மற்றும்
சீக்கிய மத தொடர்புடைய பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ், தக்ட் ஸ்ரீகேசர் சாகிப் (குரு கோவிந்த் சிங்), தக்ட் ஸ்ரீ டாம்டமா சாகிப், பீகாரில் உள்ள தக்ட் ஸ்ரீ ஹர்மந்திர் சாகிப்(குரு கோவிந்த் சிங்), தக்ட் ஸ்ரீஹசூர் சாகிப் (மஹாராஷ்டிரா) போன்ற இடங்கள், பாகிஸ்தானிலுள்ள குருத்வாரா ஸ்ரீ பஞ்ச சாகிப், ஹசன் அப்தல், குருத்வாரா ஸ்ரீ தெஹ்ரா சாகிப் போன்ற புனித தளங்களையும் உள்ளடக்கியது. இத்திட்டத்தின் கீழ் 01.07.2025க்கு பிறகு புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு மின்னணு பண வர்த்தக (ECS) முறையில் நேரடியாக மானியம் வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் / சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 30.11.2025க்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005. என்ற முகவரிக்கு அனுப்பி பயனடையுமாறு கலெக்டர் ச.அருண்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.