Perambalur: People block the road with empty pots to protest the non-distribution of drinking water for a week!
பெரம்பலூர் மாவட்டம், இலுப்பைக்குடி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இலுப்பைக்குடி வடக்கு தெருவில் வசிக்கும் குடியிருப்புவாசிகளுக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
மின் மோட்டார் பழுதடைந்ததால் குடிநீர் விநியோகம் செய்யவில்லை என தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஆலத்தூர்கேட்-அரியலூர் செல்லும் சாலையில் இலுப்பைக்குடி பேருந்து நிறுத்தம் அருகே இன்று காலை சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மருவத்தூர் போலீஸார், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொது மக்களுக்கு அளிக்கப்பட்ட உறுதியின் அடிப்படையில் பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.