Perambalur: Primary Health Center in Keelapuliyur for Rs. 1.20 crore; Chief Minister M.K. Stalin inaugurated it via video conference! Minister Sivashankar inaugurated it by lighting the lamp!!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கீழப்புலியூர் கிராமத்தில் ரூ.1.20 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை சென்னை அடையாறு, சாஸ்திரி நகர், நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் இருந்து இன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனை நேரலையில் கண்டுகளித்த தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கீழப்புலியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ச.அருண்ராஜ் தலைமையில், பெரம்பலூர் எம்.எல்.ஏ ம.பிரபாகரன் முன்னிலையில் குத்து விளக்கேற்றி வைத்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டார். கீழப்புலியூர் மற்றும் எழுமூர் ஆகிய இரண்டு துணை சுகாதார நிலையங்களை உள்ளடக்கியது. கீழப்புலியூர் துணை சுகாதார நிலையத்தில், கீழப்புலியூர், சிறுகுடல், கே.புதூர், சிலோன் காலனி, ஆகிய கிராமங்களும், எழுமூர் துணை சுகாதார நிலையத்தில், எழுமூர். ஆய்குடி, மழவராயநல்லூர் மற்றும் காருக்குடி ஆகிய கிராமங்களும் பயன்பெறுகின்றன.
இன்று திறக்கப்பட்ட புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தில் கீழப்புலியூரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சுமார் 14,000 பொது மக்கள் பயனடைவார்கள். கீழப்புலியூர் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 2 மருத்துவர்கள் உட்பட 4 செவிலியர்கள், 1 ஆய்வக நுட்புநர், 1 மருந்தாளுநர், 1 பகுதி சுகாதார செவிலியர், 2 கிராம சுகாதார செவிலியர், 1 சுகாதார ஆய்வாளர், 1 தாய்மை துணை செவிலியர், 1 பல்நோக்கு சுகாதார மருத்துவமனை பணியாளர் என 12 பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் கொ.மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் ம.கீதா, மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், முன்னாள் எம்.எல்.ஏ துரைசாமி, வட்டார மருத்துவ அலுவலர் ப.சேசு, தேசிய சுகாதார குழுமம் உதவி திட்ட அலுவலர் விவேகானந்தன், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் கீழப்புலியூரை சேர்ந்த ஆர்.எஸ். செல்வராஜ், சிவக்குமார் உள்பட முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கிராம பொதுமக்கள் திமுக பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.