Perambalur: Registered unrecognized 2 political parties that have not contested a single election will be removed; Collector’s information!
நாடு முழுவதும் 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத மற்றும் இருப்பிடம் (அலுவலகம்) கண்டறிய முடியாத பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகளை (RUPPs) முதற்கட்டமாக பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அரசியல் அமைப்பை சீர்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள 2,800-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளில் பல கட்சிகள் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளாக தொடர தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாதது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு சென்றதனை தொடர்ந்து இத்தகைய கட்சிகளை அடையாளம் காணும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு தற்போது வரை 345 கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த அப்பா அம்மா மக்கள் கழகம், பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரி 3/59 மாரியம்மன் கோவில்தெரு, அம்மாபாளையம் அஞ்சல், பெரம்பலூர் வட்டம் (ம) மாவட்டம் -621101. மற்றும் மக்கள் நீதி கட்சி-இந்தியா, பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரி 112/3 வடக்குத்தெரு, (பர்வின் காம்பளக்ஸ்), திருச்சி மெயின்ரோடு, துறைமங்கலம் அஞ்சல், பெரம்பலூர் வட்டம் (ம) மாவட்டம். 621220. ஆகிய இரு கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
எந்த கட்சியும் தேவையில்லாமல் பட்டியலிலிருந்து நீக்கப்படக்கூடாது என்பதற்காக, சம்மந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அந்த கட்சிகளுக்கு காரணம் கூற போதிய வாய்ப்பு அளித்து நோட்டீஸ் (Show Cause Notice) அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எந்தவொரு பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியையும் பட்டியலிலிருந்து நீக்குவது தொடர்பான இறுதி முடிவை இந்திய தேர்தல் ஆணையமே மேற்கொள்ளும். என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.