Co-optex, Diwali Special Discount Sale; Perambalur Collector Venkatapriya initiated.
பெரம்பலூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் வெங்கட பிரியா, குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர், அவர் தெரவித்தாவது:
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் 1935ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 86 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பினை வழங்கி பேருதவி புரிந்து வருகிறது.
காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளை கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் கோ-ஆப்டெக்ஸ் சேலைகள் மற்றும் இதர ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப் புடவைகள், கோவை கோராக்காட்டன் சேலைகள், திருபுவனம் பட்டு சேலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், கால் மிதியடிகள், நைட்டீஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன.
கடந்த தீபாவளி 2020 பண்டிகை காலத்தில் தஞ்சாவூர் மண்டலத்தில் ரூ.7.38 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது தீபாவளி 2021-க்கு ரூ.20 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2020-ல் ரூ.32.12 லட்சங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது தீபாவளி 2021-க்கு ரூ.60 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் “கனவு நனவு திட்டம்” என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, 10 மாத சந்தா தொகை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்டு, 11வது மற்றும் 12வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 20 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களும் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்களது குடும்பத்திற்கு தேவையான அனைத்து வகையான துணிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி பயனடையலாம். இந்த ஆண்டு தீபாவளியினை சிறப்பாக கொண்டாட நேரடியாக கைத்தறி நெசவாளர்களிடமிருந்து பிரத்தியேக முறையில் புது ரகங்களை அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள், கல்லூரி மாணவிகள், தங்களது வயதிற்கேற்ப அணியும் வகையில் புதுப்புது ரகங்கள் விற்பனைக்கு உள்ளது. பொதுமக்கள் அனைவரும் கைத்தறி உற்பத்தி ஆடைகளை வாங்குவதால் நெசவாளர்களின் தனிப்பட்ட வருமானம் உயர்வதோடு அவர்களுக்கு பயனுள்ளதாகவும் அமையும். மேலும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து அனைவரும் மீண்டு வந்து பண்டிகையினை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ப. அம்சவேணி, துணை மண்டல மேலாளர் (நிர்வாகம்) மு. அன்பழகன், விற்பனை நிலைய மேலாளர் கி.ஆனந்தமுருகன், பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.