In Perambalur 1 km away near the sewage waste water: the petition of no use at all! Infectious diseases, public suffered !!
பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தில் ஒரு கி.மீ தூரத்திற்கு மேல் சாக்கடை கழிவு நீர் பல மாதங்களாக தேங்கி 3 முதல் 4 அடி ஆழம் வரை தேங்கியே நிற்பதால் அப்பகுதி மக்கள் பல்வேறு தொல்லை ஆளாகி வருகின்றனர். லாடபுரம் கிராமத்தின் வழியாக பச்சைமலை மற்றும் அம்மாபாளையம், களரம்பட்டி பகுதிகளில் இருந்து மழை நீர் வரத்து வாய்க்கால் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி செல்கிறது.
இந்த வாய்க்காலில் லாடபுரம் கிராமத்தின் ஒட்டு மொத்த கழிவுநீரும் சென்று சேர்ந்து உள்ளது. அவ்வூரில் புதிதாக கட்டப்பட்ட பாலங்களுக்கு குழி தோண்டிய போது கிடைத்த மண்ணை முறையாக அப்புறப் படுத்தாமல் விட்டு விட்டதால் நீர்வரத்து வாய்க்கால் வழியாக வெளியேற வேண்டிய கழிவு நீர் சுமார் ஓராண்டாக அங்கே தேங்கி கொண்டே உள்ளது. இதனால் அப்பகுதியில் கொசு உற்பத்தி அதிகமாகி பொதுமக்களையும், குழந்தைகளையும் கடிப்பதால் காய்ச்சல், யானைக்கால் நோய் போன்ற பல்வேறு நோய்தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொசுவின் ரீங்காரத்தாலும், கொடிக்கடியில் தூங்க முடியாமல் கடும் அவதிபட்டு வருகின்றனர். மேலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் துர்நாற்றம், பாம்புகள் போன்ற கொடிய உயிரினங்களும் வீடுகளை நோக்கி படை எடுக்கிறது. அதனால் இரவில் தூங்கும் மக்கள் பாம்புகளுக்கு பயந்து கொண்டே தூங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது டெங்கு காய்ச்சலை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வரும் வேளையில் கழிவுநீரை வெளியேற்ற அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை பல மாதங்களாக மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க யாரும் முன்வரவில்லை என்றும், மழை காலம் துவங்கி மழைநீர் பெருக்கெடுத்தால் வீடுகளில் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. ஆகையினால், அரசாங்கம் கழிநீர் வாய்க்காலை சுத்தப்படுத்தி தாங்கள் அப்பகுதியில் நிம்மதியாக வாழ வழி வகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.