பெரம்பலூர் மாவட்டம் கிழுமத்தூரில் உள்ள செல்லியம்மன் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

கிழுமத்தூரில் புகழ்பெற்ற செல்லியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 16ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடந்து வருகிறது.

தினமும் ஒவ்வொரு உபயதாரர்கள் பங்களிப்புடன் செல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. தினமும் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. நேற்று பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு போட்டும் வழிபாடு நடத்தினர்.

அதைத்தொடர்ந்து இன்று காலை செல்லியம்மனுக்கு மஞ்சள், பன்னீர், தயிர், சந்தனம் உட்பட 18வகையான முலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து செல்லியம்மனுக்கு மலர்களால் சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு பாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து வானவெடிகள், மேள தாளம் முழங்க செல்லியம்மன் திருத்தேருக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் திருஷ்டி பூஜைகள் நடைபெற்றதும் காலை 9 மணியளவில் நாதஸ்வர இசை, மேளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பக்தர்கள் கூடிநின்று செல்லியம்மனுக்கு அர்ச்சனை செய்தனர். பின்னர் தேர் நிலைக்கு வந்தது.

தேரோட்டத்தில் கிழுமத்தூர், கி.குடிக்காடு, மண்டபம், வடக்கலூர் உள்ளிட்ட சுற்று கிராம மக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!