பெரம்பலூர்: இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 2017ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் நாளை ( ஜன.5 ) காலை 10.00 மணியளவில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெளியிடப்பட உள்ளது.
147,பெரம்பலூர் (தனி) மற்றும் 148 குன்னம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்ப்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி 01.09.2016 முதல் 30.09.2016 வரை நடைபெற்றது.
01.01.2017 ந் தேதியினை தகுதியான நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியான வாக்காளர்களின் பெயர்களை புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் பெயர், முகவரி போன்ற திருத்தங்களை மேற்கொள்ளவும், பெயர் நீக்கம் செய்யவும் 11.9.2016 மற்றும் 25.9.2016 ஆகிய இரு தினங்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
இச்சிறப்பு முகாம்கள் மூலமும் மற்றும் நேரடியாகவும் பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் நாளை 05.01.2017 காலை 10.00 மணியளவில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 147,பெரம்பலூர், 148,குன்னம் சட்டமன்றங்களின் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலரால் வெளியிடப்பட உள்ளது. எனவே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும், என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.