பெரம்பலூர்,மே.13- ஸ்ரீநீலியம்மன், ஸ்ரீசெல்லியம்மன், ஸ்ரீஎல்லமுத்துசாமி, ஸ்ரீபெரியசாமி கோயிலில் சித்திரை தேரோட்டம் இன்று நடந்தது.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரை கிராமத்தில் உள்ள ஸ்ரீநீலியம்மன், ஸ்ரீசெல்லியம்மன், ஸ்ரீஎல்லமுத்துசாமி, ஸ்ரீபெரியசாமி கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 5ம் தேதி இரவு காப்பு கட்டுதலும் விழா தொடங்கியது.
தொடர்ந்து 6ம்தேதி சந்தி மறித்தல், 11ம்தேதி வரை கேடயம், அன்னம், சிம்மம், குதிரை போன்ற வாகனங்களில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா வந்து பொதுமக்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து 12ம் தேதி பெரியசாமி, அம்மன் கோவில்களில் பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 10 மணியளவில் நடந்தது.
இதில் தனலட்சுமி சீனிவாசன் குழும செயலாளர் நீல்ராஜ், இயக்குனர்கள் பூபதி, மணி, அ.தி.மு.க., நகர செயலாளர் ராமச்சந்திரன், தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் துரைகாமராஜ், நகராட்சி கவுன்சிலர் பேபிகாமராஜ் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
முக்கிய வீதிகளின் வழியாக சுற்றி வந்து மாலையில் தேர் நிலை நின்றது. தொடர்ந்து நாளை மஞ்சள் நீராட்டு விழாவுடன் நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கிராம முக்கிய பிரமுகர்கள் செய்திருந்தனர்.