படவிளக்கம் : பெரம்பலூர் கிறிஸ்டியன் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடந்த 11ம் ஆண்டு துவக்கவிழாவில் கல்லூரி தாளாளர் கிறிஸ்டோபர் சேர்க்கை பெற்ற மாணவிக்கு அனுமதி கடிதத்தை வழங்குகிறார். அருகில் கல்லூரி செயலாளர் மித்ரா, துறை தலைவர் கார்மேகம் ஆகியோர் உள்ளனர்.
பெரம்பலூர் : பெரம்பலூர் கிறிஸ்டியன் கல்விநிறுவனத்தின் ஓர் அங்கமான கிறிஸ்டியன் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் 11ம் ஆண்டு துவக்கவிழா இன்று நடந்தது.
விழாவிற்கு கல்லூரி தாளாளர் கிறிஸ்டோபர் தலைமை வகித்து பேசுகையில், ஆசிரியர் பணியின் முக்கியத்துவம், பயிற்சியில் மாணவர்களின் பங்கு , எதிர்கால சிறந்த சமுதாயத்திற்கு ஆற்றவேண்டிய பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
பின்னர் ஆசிரியர் பயிற்சி பயில சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு அனுமதி கடிதத்தை வழங்கினார்.
கல்லூரி செயலாளர் மித்ரா முன்னிலை வகித்து பேசுகையில், மாணவ,மாணவிகள் தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும், எதிர்கால சிந்தனை உள்ளவர்களாகவும், ஒழுக்க நெறி உள்ளவர்களாகவும் தங்கள் வாழ்க்கையில் திகழ வேண்டும் என்றார்.
தொடர்ந்து கடந்த கல்வியாண்டு தேர்வில் முதல் இரண்டு இடங்களை பிடித்தவர்களுக்கு ஊக்க பரிசுகள் வழங்கப்பட்டது. துறை தலைவர் கார்மேகம் உட்பட பலர் பேசினர்.
விழாவில் உதவி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ,மாணவிகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக உதவி பேராசிரியர் உமாராணி வரவேற்றார். முடிவில் உதவி பேராசிரியர் கீதாலெட்சுமி நன்றிகூறினார்.